ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள் விசாரணை
பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக 1996ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 18 ஆண்டு கால இழுத்தடிப்புக்குப் பின்னர் கடந்த மாதம் 27-ந் தேதி முடிவுக்கு வந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதித்தார். அதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைவரும் ஜாமீன் கோரியும் தங்களுக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மேல்முறையீட்டு மனுவையும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றம் நால்வருக்கும் ஜாமீன் வழங்க மறுத்தது. மேலும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் 27-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இதனால் நால்வரும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து ஜாமீன் பெற்று 22 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் விடுதலையாகினர். அதே நேரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் உரிய ஆவணங்களை டிசம்பர் 18-ந் தேதிக்குள் தாக்கல் செய்தாக வேண்டும் என்ற நிபந்தனையுடன் மட்டுமே உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் விசாரணையின் போது ஜெயலலிதா உள்ளிட்டோர் தரப்பு ஆவணங்களைத் தாக்கல் செய்ய எவ்வளவு கால அவகாசம் கோருவர் என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனடிப்படையில்தான் ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் நீடிக்குமா? நீடிக்காதா? என்பதும் தெரிய வரும்.