ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்ய 10 பாயிண்டுகள்.. கர்நாடகா பக்கா ரெடி!
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய 10 அம்சங்களை இம்மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் பரிந்துரை செய்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதாவை விடுதலை செய்துள்ளது. இந்த விடுதலைக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில், அப்பீலுக்கு செல்லுமாறு கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், மாநில அரசுக்கு 10 அம்ச சிபாரிசு செய்துள்ளார்.
ஆச்சாரியா பச்சைக்கொடி
முன்னதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியாவும், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வது அவசியம் என்று கூறியிருந்தார். தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கணித தவற்றை வைத்தே, தீர்ப்புக்கு இடைக்கால தடை பெற்றுவிடலாம் என்று ஆச்சாரியா கருத்து.
விரைந்து அப்பீல்
இந்நிலையில், அட்வகேட் ஜெனரல் அளித்த சிபாரிசின் சில அம்சங்கள் மீடியாக்களுக்கு தெரியவந்துள்ளது. அந்த சிபாரிசில், கூடிய விரைவில், சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடகம் அப்பீல் செய்ய வேண்டும் என்றும், தற்போது கோடைவிடுமுறை பெஞ்ச் செயல்படுவதால் அதன்முன்னிலையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
10 பாயிண்டுகள்
ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் உள்ள கணித தவறை சுட்டிக் காட்டி, அந்த தவறால்தான் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ள அட்வகேட் ஜெனரல், கணித தவறு உட்பட மொத்தம் 10 அம்சங்களை முன்னிறுத்தி, இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்தது என்று அட்வகேட் ஜெனரல் ரெகமண்ட் செய்துள்ளாராம். மேலும், அப்பீல் செய்தால்தான், கர்நாடக அரசு, ஊழலுக்கு எதிராக வலிமையான நடவடிக்கை எடுத்தது என்ற தோற்றம் மக்களிடம் ஏற்படும் என்றும் அட்வகேட் ஜெனரல் தனது கருத்தை அதில் பதிவு செய்துள்ளாராம்.
தடை கேட்க வாய்ப்பில்லை
இந்த சிபாரிசுகளை இறுதி செய்து, மேல்முறையீடு தயாரிக்கும் பணியில் கர்நாடக சட்டத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதேநேரம், அப்பீல் செய்தாலும், கர்நாடக தரப்பில் இருந்து, ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை கேட்கப்படாது என்று தெரிகிறது.