ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி குன்ஹா தீர்ப்பிலும் கணித பிழை... சுட்டிக்காட்டிய சுப்ரீம்கோர்ட்
டெல்லி: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழக்கிய தீர்ப்பில், கணித தவறு இருப்பதை உச்சநீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திர கோஸ் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்டார்.
சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
அப்பீல்
இதை எதிர்த்து கர்நாடக அரசும், அன்பழகன் தரப்பும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் முதல், கர்நாடக தரப்பு வாதம் தொடங்கியுள்ளது. ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி தனது தீப்பில் செய்த கணித தவறுகளை முன்வைத்து, கர்நாடக தரப்பு வழக்கறிஞர் தவே வாதிட்டு வருகிறார்.
கணித தவறு
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பில், கணித தவறு இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார் நீதிபதிகளின் ஒருவரான பினாக்கி சந்திரகோஸ். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண நிகழ்ச்சியில் செய்யப்பட்ட செலவீனம் குறித்த வாதம் வந்தபோது இந்த சந்தேகத்தை நீதிபதி கேட்டுள்ளார்.
பாதியை கணக்கிட்டது
தவே வாதிடுகையில், சுதாகரன் திருமணத்திற்கு மொத்தம் ரூ.6 கோடியே 45 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்பது குற்றச்சாட்டு. இதற்கான செலவீனங்களை ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டபோது, அரசு தரப்பின் வாதத்தை நீதிமன்றம் முழுமையாக ஏற்கவில்லை. திருமண செலவீனமாக ரூ.3 கோடியை மட்டுமே கணக்கில் எடுத்தது. அப்படி குறைத்து மதிப்பிட்டுமே ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமானது.
திருமண செலவு
சிறப்பு நீதிமன்றம் எவ்வளவோ தொகையை குறைத்து மதிப்பிட்டும் கூட ஜெயலலிதா சொத்து குவித்தது நிரூபணமாகியுள்ளது. ஆனால் ஹைகோர்ட்டோ, சுதாகரன் திருமண செலவை, மணப்பெண் வீட்டார் செய்ததாக கூறியுள்ளது. இதை சுப்ரீம்கோர்ட் கணக்கில் எடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.
ரூ.45 லட்சத்திற்கு கணக்கு
அப்போது குறுக்கிட்ட நீதிபதி பினாக்கி சந்திரகோஸ், திருமண செலவு ரூ.6.45 கோடி என அரசு தரப்பு குற்றம்சாட்டிய நிலையில், ரூ.45 லட்சத்தை கணக்கில் எடுக்காமல், திருமண செலவு ரூ.6 கோடி என்றும், அதில் 3 கோடியை வேண்டுமானால் கழித்துவிடலாம் என்றும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த ரூ.45 லட்சம் குறித்து கணக்கில் வரவில்லை. ரூ.45 லட்சத்திற்கான செலவு கணக்கை இப்போது, காண்பிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.
ஜெ. தரப்புக்கு பின்னடைவு
ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமியின் கணித தவறு குறித்து கர்நாடகா வாதம் செய்துவரும் நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவும் ரூ.45 லட்சத்தை கணக்கிடாமல் விட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த தொகையை கணக்கில் கொள்ளாமலே கூட ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக நிரூபணாகியது. இப்போது சுப்ரீம் கோர்ட் இந்த தொகையையும் கணக்கில் சேர்க்க விளக்கம் கேட்டுள்ளது. இது ஜெயலலிதா தரப்புக்கு பின்னடைவாக மாற வாய்ப்புள்ளது.