டெல்லி ஐ.டி. ஊழியர் ஜிகிஷா கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு.. 2 பேருக்கு தூக்கு தண்டனை
டெல்லி: டெல்லியில் கடந்த 2009ம் ஆண்டு ஐ.டி. பெண் ஊழியர் ஜிகிஷா கோஷ் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொலை, கடத்தல், உள்ளிட்ட குற்றங்களுக்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி, ரவி கபூர், அமித் சுக்லா மற்றும் பாலாஜி சிங் மாலிக் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு, கபூர் மற்றும் சுக்லாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

டெல்லியில் தனியார் ஐ.டி நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பணியாற்றியவர் ஜிகிஷா கோஷ் (28). கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி பணி முடிந்து நிறுவனத்தின் கால் டாக்சியில் தெற்கு டெல்லியின் வசந்த் விகாரில் உள்ள தனது வீட்டருகே அதிகாலை 4 மணிக்கு வந்திறங்கினார். அதன் பிறகு, அவர் மாயமானார்.
கடத்தப்பட்ட ஜிகிஷா 3 நாட்களுக்குப் பிறகு ஹாரியானா மாநிலம் சூரஜ்குண்ட் அருகே புதருக்குள் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். தீவிர விசாரணைக்குப் பின்னர், இது தொடர்பாக அமித் சுக்லா, பல்ஜித் சிங் மாலிக், ரவி கபூர் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிப்பதற்காக இந்த கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தலைநகர் டெல்லியை உலுக்கிய முக்கிய வழக்குகளில் ஒன்றாக விளங்கிய இந்த வழக்கு தொடர்பாக பிடிபட்ட 3 பேர் மீதும் கொலை, கொள்ளை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
2009, ஜூனில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை 2010 ஏப்ரல் மாதம் தொடங்கியது. இறுதி வாதம் கடந்த ஜூலை 5ம் தேதி முடிந்தது. அமித் சுக்லா, பல்ஜித் சிங் மாலிக், ரவி கபூர் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில், குற்றவாளிகளுக்கு தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. ரவிகபூர், அமித் சுக்லாவுக்கு மரண தண்டனையும், பல்ஜீத் மாலிக்குக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications