போதை பொருள்களை விற்பதுதான் குற்றம்.... உட்கொள்வது குற்றமல்ல... தெலுங்கானா முதல்வரின் சர்ச்சை பேச்சு
போதை பொருள்களை விற்பதுதான் குற்றமே தவிர அதை உட்கொள்வது குற்றமேயில்லை என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பகீர் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஹைதராபாத்: போதை பொருள்களை உட்கொண்ட தெலுங்கு நடிகர், நடிகைகளை குற்றவாளிகளாக கருதக் கூடாது, அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்.எனவே அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயாது என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் போதை பொருள் பிடியில் சிக்கி தவிக்கிறது. மாணவர்கள், முக்கிய அரசு அதிகாரிகளின் பிள்ளைகள், ஐடி நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு போதை பொருள்களை சப்ளை செய்ததாக கெல்வினும் அவரது கூட்டாளிகள் 18 பேர் கொண்ட கும்பலும் பிடிபட்டன.

தெலுங்கு திரையுலகில்...
இவர்களிடம் நடத்திய விசாரணையில் நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், நடிகைகள் சார்மி, முமைத்கான், டைரக்டர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு உள்ளிட்டோருக்கு போதை பொருள்களை சப்ளை செய்ததாக தெரியவந்தது.

விசாரணை
இதன் அடிப்படையில் 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்தில் தெரிவிக்கையில், போதை பொருள்களை விற்பனை செய்வதும், கடத்துவதும்தான் குற்றம்.

உட்கொள்வது குற்றமில்லை
எனவே அவற்றை உட்கொள்வது தவறில்லை என்பதால் தெலுங்கு திரையுலகினர் கைது செய்யப்படமாட்டார்கள். மேலும் இந்த விவகாரத்தில் அரசு அவர்களை குற்றவாளிகளாக கருதாது, மாறாக அவர்கள் பாதிக்கப்பட்டவர்.

கடத்தல்காரர்கள்
இவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் மூலம் போதை பொருள்களை சப்ளை செய்பவர்கள் குறித்தும், அதை கடத்துபவர்கள் குறித்து விசாரணை அதிகாரிகள் உண்மையைக் கண்டறிய வேண்டும். அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த துப்பை கொண்டு முக்கியக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தெலுங்கு நடிகர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் போதை பொருள்களை உட்கொண்டனர் என்பதும் அவற்றை விற்பனை செய்யவில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

அனைத்து துறையிலும்...
சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் போதை பொருள்களுக்கு அடிமையானோர் உள்ளனர். போர்ச்சுகல், நைஜீரியா, நெதர்லாந்து, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து போதை பொருள்களை கடத்தல்காரர்கள் வாங்கி வருகின்றனர். போதை பொருள்கள் கடத்தலில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகள் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

ஹைதராபாதில் இல்லை
சினிமா துறையினரை மட்டும் குறிவைக்காமல் அனைத்து துறைகளிலும் போதை பொருள்கள் பயன்படுத்துகின்றனரா என்பதை கண்டறிய வேண்டும். ஹைதராபாதில் போதை பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளது என்பது தவறான தகவலாகும். தெலுங்கானா மாநிலத்துக்கு போதை பொருள்கள் உள்ளே நுழையாதபடி தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதே நமது லட்சியம் என்றார்.

சட்டப்படி குற்றம்
போதை பொருள்கள் தடுப்பு சட்டத்தின்படி போதை பொருள்களை உட்கொள்பவர்களும் குற்றவாளிகள்தான். அவர்களையும் கைது செய்யவேண்டும். ஆனால் தெலுங்கானா முதல்வரின் கருத்து வினோதமாக உள்ளது. இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications