டெல்லி திரும்பியதும் மண்ணை தொட்டு கும்பிட்ட நோபல் பரிசு வென்ற சத்யார்த்தி
டெல்லி: அமைதிக்கான நோபல் பரிசுடன் நாடு திரும்பிய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குழந்தை தொழிலாளர்களை விடுவிக்கும் புனிதமான பணியை செய்து வரும் டெல்லியில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். அதன் பிறகு அவர் பரிசுடன் இன்று நாடு திரும்பினார்.
டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சத்யார்த்திக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இறங்கியதும் அவர் மண்ணைத் தொட்டு கும்பிட்டு மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு அவர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். நோபல் பரிசு பெற்ற 8வது இந்தியர் சத்யார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யார்த்தி நடத்தி வரும் பச்பன் பச்சாவ் அண்டோலன் குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமைகளாக இருந்த மற்றும் கடத்தப்பட்ட 80 ஆயிரம் குழந்தைகளை இதுவரை மீட்டுள்ளது.
இது குறித்து சத்யார்த்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஜெய் ஹிந்த். உணர்வுகளை சொல்ல வார்த்தை இல்லை. தற்போது தான் நாட்டுக்கு திரும்பியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.