ஒடிஷா ஏவுகணை பரிசோதனை மையம் அருகே.. கலாமின் கருங்கல் சிலை திறப்பு
சந்திப்பூர், ஒடிஷா: ஒடிஷா மாநிலம் சந்திப்பூரில், உள்ள ஒருங்கிணைந்த செயற்கைக் கோள் ஏவுதள வளாகம் அருகே மறைந்த மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் கருங்கல் சிலை திறக்கப்பட்டுள்ளது.
சந்திப்பூர் கடற்கரையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. கலாமுக்கு மிகவும் பிடித்த இடம் இந்தக் கடற்கரை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் இந்தச் சிலையைத் திறந்து வைத்தார். எட்டு அடியில் இது அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நவீன் பட்நாயக் பேசுகையில், ‘பாரதரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் சிலையைத் திறந்து வைப்பதில் பெருமைப்படுகிறேன். நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் கலாம்' என்றார்.
இந்த விழாவில் ஒடிஷா சுற்றுலா அமைச்சர் அசோக் சந்திரபாண்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில்தான் இந்த ஏவுகணை பரிசோதனைத் தளம் உள்ளது. இது கலாமுக்கு மிகவும் நெருக்கமான இடமாகும். இங்குள்ள ஏவுகணை பரிசோதனை மையமே கலாமின் வழி காட்டுதலின்பேரில்தான் உருவாக்கப்பட்டதாகும். முழுமையான சோதனை மையமாக இது மாற கலாம்தான் முக்கியக் காரணம் ஆவார்.
2012ம் ஆண்டு அவர் ஜனாதிபதியாக இருந்தபோது இங்கு நடந்த பள்ளி விழாவில் கலந்து கொண்டு பேசினார் கலாம். அப்போது, ‘தனக்கும் பாலசோருக்கும், சந்திப்பூருக்கும் இடையிலான நெருக்கம்' குறித்து விரிவாகப் பேசி அனைவரையும் அவர் நெகிழ வைத்தார்.
டிஆர்டிஓவில் இருந்தபோது இங்கு அவர் 10 ஆண்டு காலம் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.