கர்நாடகா சட்டசபை தேர்தல்: ஆட்சியை பிடிக்க கனவு காணும் பாஜகவுக்கு 'தண்ணியிலதான்' செம கண்டமப்பா
கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க கனவு காணும் பாஜகவுக்கு தண்ணீர் பிரச்சனை பெரும் தலைவலியாக மட்டுமல்ல பேரிடியாக இருக்கப் போகிறது.
Recommended Video
பெங்களூரு: குஜராத்தைத் தொடர்ந்து கர்நாடகா சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸை பாஜகவை வீழ்த்துவது என்பது நிச்சயம் பெரும் போரட்டம்தான்.. அதே நேரத்தில் ஆட்சியை பிடிக்க கனவு காணும் பாஜகவுக்கு தண்ணீர் பிரச்சனை பெரும் தலைவலியாக மட்டுமல்ல பேரிடியாக இருக்கப் போகிறது என்பது இப்போதே வெளிப்பட தொடங்கிவிட்டது.
கர்நாடகாவில் இப்போது பாஜக கையிலெடுத்திருக்கிறது மகதாயி நதிநீர் பிரச்சனையை.. ஆனால் எடுத்த எடுப்பிலேயே சரியான மொக்கையையும் வாங்கி மோட்டு வலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எதியூரப்பா.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உற்பத்தியாகி கோவாவுக்குள் மகதாயி ஆறு. வறட்சியால் கடுமையாக பாதிக்கப்படும் வட கர்நாடகா மற்றும் கோவாவுக்கு மிகவும் முக்கியமான நீர் ஆதாரம் இந்த மகதாயி நதி.
3 மாநில பிரச்சனை
மகதாயி நதிநீரை கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா பகிர்ந்து கொள்வது தொடர்பாக நடுவர் மன்றம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வட கர்நாடகா குடிநீர் தேவைக்காக மகதாயி நதியில் இருந்து மல்லபிரபா நதிக்கு நீரை கொண்டு செல்ல கலசா- பண்டூரி கால்வாய் திட்டத்தை கர்நாடகா அரசு செயல்படுத்த திட்டமிட்டது.
கர்நாடகாவில் கொந்தளிப்பு
இதற்கு கோவா, மகாராஷ்டிரா அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து கர்நாடகா அரசு நடுவர் மன்றத்தில் முறையிட்டிருந்தது. ஆனால் நடுவர் மன்றமானது கர்நாடகாவின் கோரிக்கையை தள்ளுபடி செய்ய அம்மாநிலத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
மகதாயி விவகாரம்
அதாவது வட கர்நாடகாவுக்கு குடிநீர் பிரச்சனை இருக்கிறது; வட கர்நாடகா குடிநீர் பிரச்சனைக்காக மகதாயி நதி நீரை கோவா திறக்க வேண்டும்; மகதாயி நதிநீரை மல்லபிரபா நதிக்கு கொண்டுவர கலசா- பண்டூரி கால்வாய் முதலில் அமைக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய பிரச்சனை.
களத்தில் எதியூரப்பா
இதுவரை கலசா- பண்டூரி கால்வாயே அமைக்கவில்லை என்பது தனிக்கதை. ஆனாலும் கோவாவிடம் இருந்து நீரை பெற்றுத் தருவோம் என கோதாவில் குதித்தார் கர்நாடகாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் எதியூரப்பா. அவரைப் பொறுத்தவரையில் கோவாவில் பாஜக அரசு ஆளுகிறது; மகாராஷ்டிராவில் பாஜக அரசு ஆள்கிறது.. இதைப்பயன்படுத்தி மகதாயி பிரச்சனைக்கு தீர்வு கண்டதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதுதான் திட்டம்.
மனோகர் பாரிக்கர் உறுதி
இதன் முதல் கட்டமாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இல்லத்தில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருடன் எதியூரப்ப்பா பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மகதாயி நதியில் இருந்து மல்லபிரபா நதிக்கு 7.56 டி.எம்.சி. நீரை திறந்துவிட கோவா அரசு ஒப்புக் கொண்டுவிட்டது. இதற்கான அறிவிப்பு வந்துவிடும் என குதூகலத்துடன் நேற்று அறிவித்தார் எதியூரப்பா. அவர் சொன்னது போலவே கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், தமிழகத்துடனான காவிரி பிரச்சனைக்கு கர்நாடகா எப்படி சாக்கு சொல்லுமோ அதேபோல மகதாயி பிரச்சனை குறித்து பேச தயார் என்று மட்டுமே மனோகர் பாரிக்கர் குறிப்பிட்டிருந்தார். நீரை திறந்துவிடுவோம் என்கிற எந்த ஒரு உறுதிமொழியும் அறிவிப்பும் அதில் இல்லாதது எதியூரப்ப்பாவுக்குப் பெரும் பின்னடைவாகிப் போய்விட்டது.
சொட்டு நீரும் கிடையாது
ஏனெனில் கோவா பாஜக அரசில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருப்பவர் பாஜகவின் கூட்டணி கட்சியாக கோவா பார்வார்டு கட்சியின் வினோத் பலேகேகர். என்னதான் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகதாயி நதிநீரை திறந்துவிடுவேன் என உறுதியளித்திருந்தாலும் அதையெல்லாம் ஏற்க முடியாது என்றும் மகதாயி நதிநியில் இருந்து ஒரு சொட்டு நீரைக் கூட கர்நாடகாவுக்கு திறக்க முடியாது எனவும் பகிரங்கமாக அறிவித்துவிட்டார். இதனால் மனோகர் பாரிக்கரால், எதியூரப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் மகதாயி நீரை திறந்துவிடுவோம் என எழுத முடியாமல் போனது. இப்படி தண்ணீர் பிரச்சனையை கையிலெடுக்க போய் தண்ணியில கண்டம் என்கிற கதையாக பாஜக இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிக்கிறது.
அடிவாங்கும் பாஜக
வட கர்நாடகாவைப் பொறுத்தவரையில் பாஜகவின் வாக்கு வங்கி பகுதியாக இருந்ததுதான். ஆனால் அங்கே லிங்காயத்துக்கள் தாங்கள் இந்துக்களே அல்ல; வீரசைவர்களாகிய நாங்கள் தனி மதம் என பாஜகவின் அடிப்படை சித்தாந்தத்துக்கே காங்கிரஸின் பேராதரவுடன் ஆப்பு வைத்து கிளர்ச்சியில் இறங்கியுள்ளனர். இதனால்தான் மகதாயி நதிநீரை கையிலெடுக்க முயற்சித்தது பாஜக. ஆனால் தொடக்கத்திலேயே சரியான மொக்கையை வாங்கிக் கொண்டிருக்கிறது பாஜக.