தனிக்கொடியை உருவாக்கும் கர்நாடாகா.. ஆராய குழு அமைத்து தீவிர ஆலோசனை
பெங்களூரு: கர்நாடக மாநிலத்திற்கு என தனிக்கொடி அமைப்பது குறித்து ஆராய அம்மாநில அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு இந்தி திணிப்பிற்கு மும்மரம் காட்டி வரும் நிலையில், கர்நாடகாவில் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகாவிற்கென தனிக்கொடி அமைக்க வேண்டும் என கன்னட அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
இந்த நிலையில் இது தொடர்பாக அம்மாநில ஆளுநரின் ஒப்புதலுடன் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்ட ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்க வழிவகை செய்கிறது. அதன்படி ஜம்மு காஷ்மீர் மட்டும் மாநிலத்திற்கு என தனியாக கொடியை கொண்டிருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் தனிக்கொடியை கொண்டுவர முனைப்பு காட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக மாநிலத்தின் அதிகார பூர்வ கொடியாக மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்கள் கொண்ட கொடியை அறிவிக்க வேண்டும் என மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட போது, தனிக்கொடி அமைக்கப்பட்டால், அது இந்தியாவின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.