சதானந்தகவுடா மகன் மீது நடிகை பாலியல் புகார்.. வழக்கை தள்ளுபடி செய்ய ஹைகோர்ட் மறுப்பு!
பெங்களூர்: நடிகையை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என்று கர்நாடக ஹைகோர்ட் இன்று உத்தரவிட்டது.
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவுக்கும், குடகு மாவட்டம் சோமவார்பேட்டையை சேர்ந்த நானய்யா என்பவரின் மகள் சுவாதிக்கும் கடந்த சில வாரங்கள் முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் நடந்து முடிந்த சில மணி நேரத்தில் கார்த்திக் கவுடா தன்னை காதலித்து ஏற்கனவே ரகசிய திருமணம் செய்திருப்பதாக கன்னட நடிகை மைத்திரி, பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார்.

பலாத்காரம்
இதுதொடர்பாக கார்த்திக் கவுடாவுக்கு எதிராக ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்திலும் மைத்திரி புகார் கொடுத்தார். அதன்பேரில், கார்த்திக் கவுடா மீது பலாத்காரம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விசாரணைக்கு ஆஜராகவில்லை
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கார்த்திக் கவுடாவுக்கு ஆர்.டி.நகர் போலீசார் நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

பிடிவாரண்ட்
இந்த நிலையில், நடிகையை பலாத்காரம் மற்றும் மோசடி செய்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த கார்த்திக் கவுடாவை கைது செய்யும்படி பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே மற்றொரு கோர்ட்டில் கார்த்திக் முன்ஜாமீன் பெற்றார். அதன்பிறகு போலீசாரிடம் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வந்தார். மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

தள்ளுபடி
இந்நிலையில், தன்மீதான குற்றச்சாட்டில் அடிப்படை இல்லை என்று கூறி ஹைகோர்ட்டில் கார்த்திக் கவுடா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிடுமாறு கோரப்பட்டது. ஆனால், இம்மனுமீது இன்று தீர்ப்பளித்த ஹைகோர்ட், வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது. எனவே கார்த்திக்கை கைது செய்து விசாரிக்க போலீசார் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications