தொகுதியை மாற்றினார் சித்தராமையா.. வெறும் 257 ஓட்டுகளில் வெற்றி பெற்ற பழைய தொகுதியில் போட்டி
Recommended Video
மைசூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் மைசூர் மாவட்டம், சாமுண்டீஸ்வரி தொகுதியிலிருந்து போட்டியிடப்போவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக சட்டசபைக்கு வரும் மே 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக உள்ள சித்தராமையா, இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
மைசூரில் நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி:
வெற்றி நிச்சயம்
இந்த தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட தீர்மானித்துள்ளேன். இத்தொகுதியில் நான் 7 முறை போட்டியிட்டு அதில் 5 முறை வெற்றிபெற்றிருக்கிறேன். இந்த முறை மக்கள் ஆதரவுடன் வெற்றிபெறுவது நிச்சயம். 2006ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் கடும் நெருக்கடிக்கு நடுவே, இதே தொகுதியில், மக்கள் ஆதரவுடன் நான் வெற்றிபெற்றேன் என்றார்.
மைசூர் மாவட்டம்
சாமுண்டீஸ்வரி சட்டசபை தொகுதி, மைசூர் மாவட்டத்திலுள்ளது. சித்தராமையாவின் சொந்த கிராமம் மைசூர் மாவட்டத்தில்தான் உள்ளது. எனவே அவர் சாமுண்டீஸ்வரி சட்டசபை தொகுதியில் அதிக முறை போட்டியிட்டுள்ளார். ஆனால், 2006 இடைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் வெறும் 257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டார் சித்தராமையா.
தொகுதியை மாற்றினார்
எனவே, 2008ம் ஆண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டதை அடுத்து மைசூரில் வருணா தொகுதியிலிருந்து சித்தராமையா போட்டியிட தொடங்கினார். தற்போது மீண்டும் அவர் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால், இந்த தொகுதியில் சித்தராமையா தோற்பது உறுதி என மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி மாநில தலைவர் எச்.டி.குமாரசாமி கூறி வருகிறார்.
சொன்னதையே சொல்கிறாரே
கடந்த சட்டசபை தேர்தலின்போதே, இதற்கு மேல் தான் எந்த தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என கூறியவர் சித்தராமையா. ஆனால், பதவியில் அமர்ந்த பிறகு என்ன நினைத்தாரோ, இம்முறை மீண்டும் போட்டியிடுகிறார். இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்றே இப்போதும் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.