மூன்றாக பிரிகிறது பெங்களூர் மாநகராட்சி.. கர்நாடக இரு அவைகளிலும் சட்டம் நிறைவேறியது!
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சியை மூன்றாக பிரிக்கும் சட்டம் கர்நாடக சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் நிறைவேறிவிட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்தால், உடனடியாக இச்சட்டம் அமலுக்கு வரும்.
சுற்றிலும் உள்ள 7 நகராட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை இணைத்துக் கொண்டு, பெங்களூர் மாநகராட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெருநகர் பெங்களூர் மாநகராட்சியாக (பிபிஎம்பி)மாறியது. இதனால் மக்கள் தொகை பெருத்துவிட்டதோடு, நகரின் பரப்பளவும் மூன்று மடங்கு அதிகரித்தது.
இதனால், புறநகர் பகுதிகளிலுள்ள மக்கள், மாநகராட்சி பணிகளை மேற்கொள்ள நெடுந்தூரம் அலைய வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, மாநகராட்சியை மூன்றாக பிரிக்க சித்தராமையா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், தமிழர்கள் உள்ளிட்டோர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக கவுன்சிலராக தேர்வாகிவிடுவார்கள், தமிழர்கள் மேயராகிவிடுவார்கள் என்று மதசார்பற்ற ஜனதாதளமும், பாஜகவும் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றன.
அதேநேரம், தற்போதுள்ள நிலையிலேயே மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தால், காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். மீண்டும் பாஜகவே அங்கு ஆட்சியமைக்கும் சூழல் உள்ளது. எனவே மூன்றாக பிரித்து தேர்தலை நடத்தினால்தான் தங்களுக்கு ஆதாயம் என்று காங்கிரஸ் அரசியல் கணக்கு போடுகிறது.
இதையடுத்து பெங்களூரை மூன்றாக பிரிக்கும் கர்நாடக முனிசிபல் கார்பொரேசன் (திருத்த) மசோதாவை ஏப்ரல் 20ம் தேதி பேரவையில் தனது பெரும்பான்மை மூலம் நிறைவேற்றியது அரசு. ஆனால், மேலவையில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் அதே மாதம் 27ம்தேதி, மேலவையில் அந்த மனு திருப்பியனுப்பப்பட்டது.
இந்நிலையில் நேற்று பேரவையில் மீண்டும் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2வது முறையாக மேலவைக்கு அதே சட்டம், இன்று வாக்கெடுப்புக்காக வந்தது. ஆனால், சட்டவிதிப்படி 2வது முறையாக மேலவைக்கு வரும் ஒரு சட்டத்தை மேலவையால் நிராகரிக்க முடியாது. அதை நிறைவேற்றியே தீர வேண்டும். எனவே பாஜக, மஜத உறுப்பினர்கள் சம்பிரதாயமாக எதிர்ப்பை பதிவு செய்து வெளிநடப்பு செய்தனர். மேலவையில் சட்டம் நிறைவேறியது.
இந்நிலையில், பெங்களூர் மாநகராட்சிக்கு இப்போதுள்ள கட்டமைப்பின்படியே ஆகஸ்ட் 22ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இப்போது அங்கீகாரம் செய்யப்பட்ட சட்டத்திற்கு, ஆளுநர் உடனடியாக அங்கீகாரம் வழங்கினால், மாநகராட்சி தேர்தல், தள்ளிப்போகும். புதிய கட்டமைப்பின்படி, தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமாகிவிடும்.
மாநகராட்சியின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அமலுக்கு வருவதால், அதற்கு பிறகு ஆளுநர் இச்சட்டத்திற்கு அங்கீகாரம் கொடுத்தால், அரசால் மாநகராட்சியை பிரிக்க முடியாது. பிரிக்கப்படாத ஒருங்கிணைந்த மாநகராட்சிக்கே தேர்தல் நடைபெறும்.
மாநிலத்தில் மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநராக வஜுபாய் வாலா செயல்பட்டு வருகிறார். அவர், இச்சட்டத்திற்கு உடனே அங்கீகாரம் தர மாட்டார் என்றே கூறப்படுகிறது.