காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது- கண்காணிப்புக் குழுவிடம் கர்நாடகா #cauvery
டெல்லி: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று கண்காணிப்புக் குழுவிடம் கர்நாடகா அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி நீரை திறந்துவிட வேண்டும் என்று செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற்ற கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது தமிழகமும் கர்நாடகாவும் கடந்த 9 ஆண்டுகால நீர் இருப்பு, பகிர்வு விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கண்காணிப்புக் குழு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையிலான இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநில தலைமைச் செயலர்கள் பங்கேற்றனர்.
இன்றைய கூட்டத்தில் கர்நாடகா அரசு தரப்பில் தமிழகத்துக்கு இனியும் நீரை தர முடியாது என்று திட்டவட்டமாக அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தமிழகத்துக்கு இதுவரை 13 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் 4 அணைகளில் 27 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது.
அடுத்த ஆண்டு ஜூலை வரை கர்நாடகாவுக்கு குடிநீருக்கு 21 டிஎம்சி நீர் தேவை. கர்நாடகாவில் 18% மழை குறைவாக பெய்துள்ளது. ஆகையால் தமிழகத்துக்கு இனியும் நீரை திறந்துவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.