தற்கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி: கேஜ்ரிவால் அறிவிப்பு
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கோரி தற்கொலை செய்துகொண்ட முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ..1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், யூரி தாக்குதலில் உயிரிழந்த வீரர்
டெல்லி: ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (ஒபஒஓ) கோரி தற்கொலை செய்துகொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.
பம்லாவில் ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட கேஜ்ரிவால் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நாங்கள் தியாகியாகக் கருதும் ராணுவ வீரர் ராம் கிஷணின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாயை வழங்குகிறோம். தைரியமான வீரர் என்பதை அவர் நிரூபித்துவிட்டார். நாட்டுக்காகவே வாழ்ந்து, நாட்டுக்காகவே அவர் உயிர் நீத்துள்ளார்.
ஒரே பதவி; ஒரே ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஒட்டுமொத்த இந்தியாவும் போராடும். நம்முடைய வீரர்களுக்காக இத்திட்டத்தை அமல்படுத்துமாறு அரசை வலியுறுத்துவோம்.
டெல்லி அரசு, ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.1 கோடியை இழப்பீடாக வழங்குகிறது. இது வீரர்களின் தியாகத்துக்கு வழங்கப்படும் சிறு தொகை'' என்றார் கேஜ்ரிவால்.
ராணுவ வீரரின் இழப்பில் நீங்கள் அரசியல் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு, ''ஆம். நாங்கள் அரசியல்தான் செய்கிறோம். எங்கள் வீரர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசியல் செய்கிறோம். மத்திய அரசு, ராணுவ வீரர்களை ஏமாற்றி அரசியல் செய்கிறது. காஷ்மீர் மாநில யூரி தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ. கோடி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்" என்றார் கெஜ்ரிவால்.
இதனிடையே, ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சிந்தியாவும் இத்திட்டத்தில் உள்ள பிரச்னைகள் இரண்டு மாத காலத்திற்குள் தீர்க்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கரும் கூறியுள்ளனர்.