நிதின் கட்காரி அவதூறு வழக்கு: ஜாமீன் தொகையை செலுத்தாமல் ஜெயிலுக்கு போன கேஜ்ரிவால்!!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜாமீனுக்கான பிணைத் தொகையை செலுத்த மறுத்ததால் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை 2 நாள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரியை ஊழல்வாதி என விமர்சித்திருந்தார். இந்தியாவின் பெரிய ஊழல்வாதிகள் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்ட அரவிந்த் கேஜ்ரிவால், நிதின் கட்காரியையும் அதில் இணைத்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்காரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்றைய விசாரணையின் போது உங்களுக்கு இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் வேண்டுமெனில் ரூ10 ஆயிரத்துக்கான பிணைத்தொகையை செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
ஆனால் இந்த ரூ10 ஆயிரம் பிணைத் தொகையை செலுத்த கேஜ்ரிவால் மறுத்துவிட்டார். அரசியல் வழக்குகளில் ஜாமீனுக்கு பணம் கட்டுவதில்லை என்பது ஆம் ஆத்மியின் கொள்கை என்பதால் அத்தொகையை கட்ட மறுத்தார் கேஜ்ரிவா.
இதனைத் தொடர்ந்து அவரை 2 நாள் சிறையில் அடைக்க (நீதிமன்றக் காவலில் வைக்க) டெல்லி கோர்ட் உத்தரவிட்டது. பின்னர் கோர்ட் உத்தரவுப்படி அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். பின்னர் டெல்லி திஹார் சிறையில் கேஜ்ரிவால் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கின் மீது வரும் 23-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. அன்று மாலை வரை கேஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.