மெஷின் வைத்து கள்ள நோட்டு அடித்த பாஜக இளைஞரணித் தலைவர்…. இப்போ கம்பி எண்ணுகிறார்!
கேரளாவில் வீட்டிலேயே மெஷின் வைத்து கள்ள நோட்டு அடித்து வந்த பாஜக இளைஞரணித் தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம் : பாஜகவின் இளைஞர் அமைப்பான பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவர் கள்ள நோட்டு அச்சிட்டு சந்தையில் புழக்கத்திற்கு விட்ட காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் திருச்சூரில் ஜேன் 22ம் தேதி ராகேஷ் எழச்சேரி என்பவரை ரூ.1.5 லட்சம் கள்ள நோட்டுகளுடன் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது வீட்டிலேயே மெஷின் வைத்து அதற்கான மைகளை பயன்படுத்தி கள்ள நோட்டுகளை அடித்த வந்தது தெரிய வந்துள்ளது.
ராகேஷ் தன்னுடைய சகோதரருடன் சேர்ந்து வீட்டிலேயே பணம் அச்சிடும் மெஷினை வைத்து புதிய ரூபாய் நோட்டுகளை தயாரித்து வந்ததை போலீசாரிடம் ஒப்புகொண்டுள்ளார். மேலும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.20 வரை அசல் நோட்டுகளைப் போலவே அச்சடித்து அவற்றை அருகில் உள்ள பெட்ரோல் பங்குகள் மற்றும் கடைகளில் கொடுத்து மாற்றியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
திருச்சூர் பகுதியில் கள்ளநோட்டுகள் அடித்து புழக்கத்திற்கு விடப்படுவதாக புகார்கள் போலீசாருக்கு வந்துள்ளன. இதனையடுத்து ராகேஷை தொடர்ந்து கண்காணித்ததன் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.