முல்லை பெரியாறு அணையை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகிறது தமிழகம்- கேரளா
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு விவகாரத்தை தமிழக அரசு அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக கேரளா பரபரப்பு குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றத்தில் மனு வடிவில் வழங்கியுள்ளது.
முல்லை பெரியாறு அணைக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என கோரி தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கேரள ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் முல்லை பெரியாறு அணைக்கு தீவிரவாதிகளின்அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான். ஆனால் அணையின் பாதுகாப்புக்கு மத்திய போலீஸ் தேவையில்லை என்றும் கேரள போலீசே சிறந்த பாதுகாப்பு அளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்காக ஒரு டிஎஸ்பி தலைமையில் 124 பேர் அடங்கிய போலீஸ் படை நிறுத்தப்படும் என கேரள முதல்வர் உம்மன்சாண்டி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அணை பாதுகாப்புக்காக தேக்கடியில் ஒரு புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கேரள சார்பில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக உசசநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் முல்லை பெரியாறு அணைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசின் கடமையாகும். இந்த விஷயத்தில் கேரள உறுதியாக உள்ளது.
அணைக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக தேக்கடியில் ஒரு புதிய போலீஸ் நிலையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதில் 1 டிஎஸ்பி தலைமையில் 124 காவலர்கள் இடம் பெறுவார்கள். அணையின் பாதுகாப்பு விஷயத்தையும் தமிழக அரசு அரசியலாக்குகிறது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்ட்டுள்ளது.