கர்நாடக அரசு பஸ்கள் வேலை நிறுத்தம்.. தமிழகத்திற்கு இயக்கப்படும் கேஎஸ்ஆர்டிசி பஸ் சேவை பாதிப்பு
பெங்களூர்: கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, பெங்களூரிலிருந்து தமிழகம் செல்லும் கர்நாடக அரசு பஸ்களின் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று இரவு முதல் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
வெளி மாநிலங்கள், வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் மட்டுமின்றி, பெங்களூர் நகர சிட்டி பஸ் சர்வீசான பிஎம்டிசி உள்ளிட்டவற்றின் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கிற்கு ஒத்துழைக்காமல் இயக்கப்பட்ட பஸ்கள் மீது கல் வீச்சு நடந்துள்ளது.
ஒசூர், சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழக நகரங்களில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு பேருந்துகள்தான் கர்நாடகாவிற்குள் வழக்கம்போல வருகின்றன. செல்கின்றன. இதனால் அந்த பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
தமிழக பஸ்கள் தற்போது தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் பஸ்களை இயக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படும் என்று கர்நாடக போக்குவரத்து துறை ஆணையர் தெரிவித்தார்.