லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை: மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஜாமீன் மனு தள்ளுபடி!
லக்கிம்பூர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் 4 பேரை கார் ஏற்றி படுகொலை செய்த வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உட்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
லக்கிம்பூரில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கறுப்பு கொடி போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் 3-ந் தேதி லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அவர்கள் மீது சொகுசு கார் ஏற்றப்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இதையடுத்து மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்ட 10 பேரை உ.பி. போலீசார் கடந்த மாதம் 9-ந் தேதி கைது செய்தனர்.

ஆஷிஸ் மிஸ்ரா துப்பாக்கிச் சூடு நடத்தினாரா?
இவ்வழக்கில் கடந்த வாரம் தடவியல் துறையின் அறிக்கை வெளியாகி இருந்தது. அதில் ஆஷிஸ் மிஸ்ராவின் துப்பாக்கியில் இருந்து தோட்டா பாய்ந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் லக்கிம்பூர் விவசாயிகள் மீது ஆஷிஸ் மிஸ்ராதான் துப்பாக்கிச் சூடு நடத்தினாரா? என்பது மட்டும் உறுதி செய்யப்படாமல் இருந்தது.

ஜாமீன் மனுக்கள் தாக்கல்
இதனிடையே ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்ட 3 பேர் லக்கிம்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தங்களுக்கு ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் ஆஷிஸ் மிஸ்ரா, லவ் குஷ் ராணா, ஆஷிஸ் பாண்டே ஆகிய 3 பேரின் ஜாமீன் மனுக்களை லக்கிம்பூர் நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது. இதனைத் தொடர்ந்து இந்த 3 பேரும் லக்னோ உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

3 பேரின் ஜாமீன் மனுக்கள் டிஸ்மிஸ்
இந்த ஜாமீன் மனுக்களை டிஸ்மிஸ் செய்த மாஜிஸ்திரேட் முகேஷ் மிஸ்ரா, தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்ட 3 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆகையால் 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
முன்னதாக உச்சநீதிமன்றத்தில் லக்கிம்பூர் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, லக்கிம்பூர் படுகொலை குறித்து வெளிமாநில ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்கிற உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை ஏற்பதாக உ.பி. அரசு தெரிவித்திருந்தது. உ.பி.அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே இதனைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications