பெண்கள் அலங்கோலமாக டிரஸ் போட்டால் ஆண்கள் என்ன செய்வார்கள்.. கர்நாடக பெண் சாமியாரின் சர்ச்சைப் பேச்சு
தார்வாட்: பெண்கள் முதலில் அலங்கோலமாக டிரஸ் போடுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் உடல் அழகை வெளிப்படுத்தும் வகையில், இறுக்கமாக டிரஸ் போட்டால் பாலியல் பலாத்காரங்கள் நடக்கத்தான் செய்யும். இதில் ஆண்களை மட்டும் குறை சொல்லக் கூடாது. மேலும் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கினால் பலாத்காரங்களைத் தடுக்கலாம் என்று கர்நாடகத்தைச் சேர்ந்த பெண் சாமியார் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்தவர் மாதே மகாதேவி. இவர் ஒரு பெண் சாமியார். லிங்காயத்து சமூக சாமியார் ஆவார். அவரை அந்த மாநிலத்தில் ஜெகத்குரு என்று பக்தர்கள் அழைக்கிறார்கள்.
கூடலசங்கமாவில் உள்ள பசவதர்ம மடத்தின் பீடாதிபதியாக உள்ளார். கர்நாடகத்தின் ஒரே பெண் சாமியார் இவர்தான். இவர்தான் இப்போது சர்ச்சையாக பேசியுள்ளார்.
தார்வாடில் அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது....
ஆண்களை மட்டும் குறை கூறாதீர்கள்
பாலியல் குற்றங்களுக்கு ஆண்களை மட்டுமே குறை கூறக்கூடாது. அவர்கள் மட்டும் காரணம் அல்ல.
இறுக்கமாக டிரஸ் போடுவது யார்
உடல் அழகை வெளிப்படையாக எடுத்துக்காட்டும் வகையில் இறுக்கமாக, அரைகுறையாக, அலங்கோலமாக பெண்கள் ஆடைகளை அணிவதும் பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.
ஐடி பெண்கள் சரியில்லை
ஐடி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம் பெண் ஊழியர்கள் மிகவும் இறுக்கமாக, உடல் அழகு வெளியே தெரியும் வகையில் டிரஸ் போடுகிறார்கள். இதுதான் தூண்டுதலை ஏற்படுத்துகிறது. அபாயத்தை நேரில் அழைப்பது போல இது உள்ளது.
ராத்திரி வெளியே திரியாதீர்கள்
அதேபோல தங்களது மகள்களை மாலை மற்றும் இரவு நேரங்களில் பெற்றோர் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. வீட்டோடு இருக்கச் சொல்ல வேண்டும்.
கண்ணியமாக நடந்தால்
நமது பாரம்பரியம் சார்ந்த ஆடைகளை அணிந்து கண்ணியமாக நடந்து கொண்டால் பெண்களை தவறாக யாரும் நோக்கமாட்டார்கள்.
பண்பாட்டை மறக்கக் கூடாது
எனவே நடை, உடை, பாவனைகளில் கண்ணியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனாவசியமாக தொல்லையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். நம் பண்பாட்டு விஷயங்களை எந்த வகையிலும் நாம் மறந்துவிடக் கூடாது. அவற்றை நம் வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
விபச்சாரத்தை அனுமதிப்போம்
கற்பழிப்பு, பலாத்காரம் போன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்த, விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பாலியல் குற்றங்களை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
மிரட்டும் பெண்கள்
சில பெண்கள் சட்டங்களை காட்டி மிரட்டுவது, பிளாக்மெயில் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மைதான். பாரம்பரிய பண்பாட்டில் நம்பிக்கை உடைய பெண்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள்.
யோசனைகளைப் பரிசீலியுங்கள்
மேலை நாகரிகத்தின் நகல்களாகவும், நிழல்களாகவும் பெண்கள் நடந்துகொள்ளக் கூடாது. எனது யோசனைகளை பரிசீலித்து உரிய முடிவெடுக்க சிறப்பு குழுவை அமைக்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன். சமூகத்தீமைகளை களைய தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்கள் அவசியம் என்று கூறினார் மாதே மகாதேவி.