எழுத்துப் பிழைகளுடன் லெட்டர் ஹெட்.... மீண்டும் சர்ச்சையில் ஸ்மிருதி இரானி
டெல்லி: கல்வித் தகுதி சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இப்போது 'எழுத்துப் பிழை' பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார்... டெல்லி பள்ளிக்கூடம் ஒன்றுக்கு ஸ்மிருதி இரானி அனுப்பிய கடிதத்தில் இருந்த எழுத்துப் பிழைகள்தான் இப்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்காக ஓடுகிறது.
மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. தேர்வில் சிறப்பான தேர்ச்சி அடைந்த டெல்லி பள்ளி ஒன்றுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பெயரில் பாராட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் அந்தக் கடிதத்தில் அமைச்சரின் பெயரே இந்தியில் எழுத்துப்பிழையுடன் இருந்தது. அத்துடன் ‘மினிஸ்டர்' என்ற ஆங்கில வார்த்தையிலும், ‘சன்சதன்' என்ற இந்தி வார்த்தையிலும் எழுத்துப்பிழை இருந்தது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
இந்த கடிதத்தை பெற்ற அந்த பள்ளியை சேர்ந்த ரிச்சா குமார் என்ற ஆசிரியை, அதை பேஸ்புக்கில் ஒரு குறிப்புடன் வெளியிட்டார். அதில் அவர் அமைச்சரின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்ததுடன், கடிதத்தில் இருந்த எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டி இருந்தார். குறைந்தபட்சம் உங்களுக்காக வேலை செய்கிறவர்கள், அமைச்சகத்தில் உள்ளவர்கள் நல்ல கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் என கூறி இருந்தார்.
இது போதாதா? வலைதளவாசிகள் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர்... இதை அறிந்த அமைச்சர் ஸ்மிருதி இரானி அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் தனது பெயரில் அனுப்பிய கடிதத்தில் எழுத்துப்பிழைகள் இருப்பது குறித்து சி.பி.எஸ்.சி.யிடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும் கூறினார்.
ஆனாலும் விடுவார்களா வலைதளவாசிகள்.. விமர்சன வேட்டையை தொடரவே செய்கின்றனர்..