'நமோ' சொல்வதை நான் ஆ'மோடி'க்கிறேன்... அத்வானி!
டெல்லி: கட்டாய வாக்குரிமை குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார், பிரதமர் வேட்பாளர் போட்டியில் அவரிடம் மோதி தோல்வியைத் தழுவிய மூத்த பாஜக தலைவர் அத்வானி.
இதுகுறித்து இன்று தனது பிளாக்கில் அவர் நீண்ட கட்டுரை ஒன்றை வடித்துள்ளார்.
அதில், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதோடு, கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதையும் அமல்படுத்த வேண்டும் என்று மோடி கூறியிருப்பது சரிதான் என்று அத்வானி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது பிளாக்கில் அத்வானி எழுதியுள்ளதன் சுருக்கம்...
தேர்தல் சீர்திருத்தம்
எனது இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நான் அதிக கவனம் செலுத்திய ஒன்று எது என்றால் அது தேர்தல் சீர்திருத்தம் குறித்துதான்.
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை
கடந்த வாரம் ஒரு பொது நலன் வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. அது, எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதையும் வாக்களிக்கும் இயந்திரத்தில் சேர்க்க வேண்டும் என்பது.
தேர்தல் ஆணையமும் தயார்தான்
இந்தத் தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளனர். தேர்தல் ஆணையமும் கூட இதைச் செய்வதில் கஷ்டமில்லை என்று தெரிவித்துள்ளது.
ஆனால் வாக்காளர்கள் என்ன செய்கிறார்கள்...
ஆனால் இன்றைய நிலவர்ம் என்ன.. வாக்களிக்கும் உரிமை பெற்ற பலரும் வாக்களிப்பதில்லை. தங்களது மதிப்பு மிக்க வாக்குகளை பயன்படுத்துவதில்லை.
கட்டாயப்படுத்த வேண்டும்
எனவே யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தும் போது கூடவே, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதையும் சேர்த்து அமல்படுத்தினால்தான், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முழு அர்த்தம் கிடைக்கும் என்பது எனது கருத்து.
குஜராத் முன்னுதாரணம்
இந்த கட்டாய வாக்களிக்கும் முறையை குஜராத்தில் அறிமுகப்படுத்த அந்த மாநில சட்டசபையல் முதல்வர் நரேந்திர மோடி, 2 முறை மசோதா கொண்டு வந்தார். ஆனால் அதை குஜராத் ஆளுநர் ஏற்கவில்லை, டெல்லியும் ஏற்கவில்லை. இந்த சட்ட மசோதா உண்மையில் வரவேற்கப்பட வேண்டியதாகும்.
யாருக்கும் வாக்களிக்கவில்லை என்றால் பிரச்சினை வரும்...
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து அழகான கட்டுரை எழுதியுள்ளார். அதில் இந்த தீர்ப்பின் சாதக பாதகங்களை ஆராய்ந்து கூறியுள்ள அவர், இந்த முடிவால் பல பிரச்சினைகள், குழப்பங்கள் வரும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
31 நாடுகளில் வாக்களிப்பது கட்டாயம்
இன்று உலகில் 31 நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.
கூட்டத்தைக் கூட்டுங்கள்
எனவே தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதில், எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பது குறித்து முழுமையாக ஆலோசிக்க வேண்டும். இதுகுறித்து விரிவான விவாதம் நடத்தி பின்னர் முடிவுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார் அத்வானி.