மும்பை கேட்வே ஆப் இந்தியா அருகே கடலில் மிதந்து வந்த 1000 ரூபாய் நோட்டுக்கள்
மும்பை: மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியா பகுதியில் உள்ள கடலில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென வந்த ரூபாய் நோட்டுக்களால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. பலர் உயிரைப் பணயம் வைத்து கடலில் குதித்து பணத்தை எடுக்க முற்பட்டனர்.
இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. தகவல் பரவியதும் பெரும் கூட்டம் அங்கு கூடி விட்டது. பலரும் கடலில் குதித்துப் பணத்தை எடுக்க முயன்றனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
கள்ளப் பணம்...
இந்தப் பணத்தை யார் கடலில் போட்டது என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸாரும் விசாரணையில் இறங்கியுள்ளனர். சிலர் அடையாளம் தெரியாத யாரோ ஒரு பணக்காரர் கடலில் கொண்டு வந்தப் பணத்தைப் போட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். அனேகமாக இது கள்ளப் பணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
லட்சக்கணக்கான பணம்...
கடலில் போடப்பட்டது சில லட்சமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள மீனவர்கள்தான் பணம் கடலில் மிதப்பதை முதலில் பார்த்துள்ளனர். இதையடுத்தே அப்பகுதியில் கூட்டம் கூடி பலரும் கடலில் குதித்து பணத்தை எடுக்க ஆரம்பித்தனர்.
கூட்டம்...
கரன்சி மிதப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து வந்த கூட்டத்தால் கொலாபா முதல் கபே பரேட் வரை கூட்டமாக காணப்பட்டது. பலரும் கடற்கரையில் இருந்த சுவரின் மீது ஏறி நின்று பணம் வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
வெற்றி.. வெற்றி...
சிலர் சில நோட்டுக்களை எடுத்து வெற்றிப் பெருமிதத்தில் மேலேறி வந்தனர். ஒரு சிலருக்கு 3000 வரை கிடைத்ததாம்.