தூண்டி விடுறாங்க.. "ராமர் இந்துக்களுக்கு மட்டும் கடவுள் அல்ல".. ஃபரூக் அப்துல்லா திடீர் பேச்சு
ஸ்ரீநகர்: "ராமப்பிரான் அனைவருக்கும் பொதுவானவர். அவர் இந்துக்களுக்கு மட்டுமான கடவுள் இல்லை" என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
அரசியல் ஆதாயத்துக்காக இந்து மதத்தினரை தூண்டிவிட்டு அரசியல் செய்யும் கட்சிகளிடம் இந்திய மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், பாஜகவை தாக்கும் வகையில் ஃபரூக் அப்துல்லா இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மதம் தீமை செய்யாது, ஆனால்..
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் மாபெரும் மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு தலைமை வகித்து ஃபருக் அப்துல்லா பேசுகையில், "இந்திய மக்கள் அனைவரும் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். எந்த மதமும் தீமையானது அல்ல. மனிதர்கள்தான் குற்றம் செய்வார்களே தவிர. அந்த மனிதர்கள் சார்ந்த மதங்கள் தவறு செய்யாது. அனைத்து மதங்களும் மனிதனை நல்வழிப்படுத்தே முயற்சிக்கின்றன. ஆனால், மனிதன்தான் தனது சுயநலத்துக்காக தீய விஷயங்களை செய்கிறான். அதிலும் கொடுமையானது என்னவென்றால், மதத்தின் பெயரால் சில கயவர்கள் தீய காரியங்களில் ஈடுபடுவதுதான்.
இந்துக்கள் ஜாக்கிரதை..
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் இந்து மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுவரை நீங்கள் உணவில்லாமல் கஷ்டப்பட்ட போதும், கொரோனா காலத்தில் நமது வாழ்வாதாரத்தை இழந்து நின்ற போதும் உங்களை எட்டிக் கூட பார்க்காத சில அரசியல்வாதிகள் இப்போது உங்களை தேடி வருவார்கள். வருவதுடன் இல்லாமல், இந்து மதமும், இந்து மக்கள் ஆபத்தில் இருப்பதாக அவர்கள் கூறுவார்கள். உங்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுவார்கள். அவர்களை நம்பாதீர்கள். இந்தியாவில் 80 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில், எப்படி இந்துக்கள் ஆபத்தில் இருக்க முடியும்? நீங்கள் இவ்வாறு கேட்டால் அவர்கள் திரும்பிப் போய் விடுவார்கள்.
"ராமர் அனைவருக்குமான கடவுள்"..
எல்லா மனிதர்களும் ஒன்று தான். அவர்கள் வழிபடும் கடவுள்கள் தான் வேறு வேறு. எந்த கடவுள் உங்களுக்கு விருப்பமோ அவரை நீங்கள் வணங்குங்கள். அதற்கு மதம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. ஒரு முஸ்லிம் இந்து கோயிலுக்குள் நுழைந்தால் அவர் இந்துவாக மாறி விடுவாரா அல்லது ஒரு இந்து மசூதிக்கு வந்தால் அவர் இஸ்லாமியர் ஆகிவிடப் போகிறாரா? இந்திய மக்களிடையே இந்த பேதம் வேண்டாம். ராமப்பிரான் இந்துக்களுக்கு மட்டுமான கடவுள் இல்லை. அவர் அனைவருக்குமான கடவுள். இந்த பக்குவம் அனைவருக்கும் வந்தாலே ஜாதி, மத பிரச்சினைகள் நடக்காது.
பின்தங்கிய நிலையில் காஷ்மீர்..
மத்திய பாஜக ஆட்சியின் கீழ், காஷ்மீர் இன்று மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுவிட்டது. காஷ்மீரை இரண்டாக உடைத்ததால் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரிடம் இருந்து பறிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை உடனே வழங்க வேண்டும். அதுதான் காஷ்மீர் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். காஷ்மீரும், லடாக்கும் இணையும் நாள் வெகுதொலைவில் இல்லை. காஷ்மீர் மக்கள் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் மத்திய அரசு தெரிவித்தது. எங்கு அந்த வேலைவாய்ப்புகள்? எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள் ஆகியோர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு ஃபருக் அப்துல்லா கூறினார்.