பாஜகவின் சாத்வி பிரக்யாவை விட படுதீவிர மத நம்பிக்கையாளராக இருக்கிறாரே காங். வேட்பாளர் திக்விஜய்சிங்
போபால்: இந்துத்துவா சக்திகளின் புதிய முகமாக போபாலில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டார் சாத்வி பிரக்யாசிங் தாக்கூர். ஆனால் தேர்தல் களத்தில் பிரக்யாவைவிட காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய்சிங் 'இந்துத்துவாவாதி'யாக அடையாளப்படுத்திய விசித்திரம் நடைபெற்றுள்ளது.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி சிறைவாசம் அனுபவித்தவர் சாத்வி பிரக்யா. சிறையில் இருந்து மீண்ட பிரக்யாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முக்கியத்துவம் கொடுத்தது.
இதற்கு முன்னர் பாஜகவின் பிரசார பீரங்கியாக இருந்த உமாபாரதியின் இடத்துக்கு பிரக்யாவை நிறுத்தியது ஆர்.எஸ்.எஸ். இதனால் உமாபாரதியின் போபால் தொகுதியில் பிரக்யாசிங் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
வாய்ப்பூட்டு போட்ட சாத்வி
படுதீவிர இந்துத்துவாவாதியாக அறியப்பட்ட சாத்வி பேசிய அத்தனை பேச்சுகளும் சர்ச்சைகளின் உச்சம். இதனால் அவருக்கு தேர்தல் ஆணையம் வாய்ப்பூட்டு போட்டது. சாத்வி பிரக்யாசிங் இந்துத்துவா கொள்கைவாதி.. அவர் அந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுவதில் விமர்சனம் ஏதும் இல்லை.
அதிர வைக்கும் திக்விஜய்சிங் பிரசாரம்
ஆனால் மதச்சார்பற்ற முகத்தைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திக்விஜய்சிங் மேற்கொண்டிருக்கும் பிரசாரம்தான் அதிரவைக்கிறது. போபால் வேட்பாளராக திக்விஜய்சிங்கை காங்கிரஸ் அறிவித்திருந்தது
திக்விஜய்சிங் தீவிர பிரசாரம்
இதனைத் தொடர்ந்து கோவில்கள், குருத்வாராக்கள் மற்றும் மசூதிகளில்தான் அதிகமாக பிரசாரம் செய்தார் திக்விஜய்சிங். 83 இந்து மடங்களுக்கு பிரசாரத்தின் போது திக்விஜய்சிங் சென்றார். அத்துடன் 7,000 சாதுக்கள் திக்விஜய்சிங்குக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். பல்லாயிரம் சாதுக்கள் ஒன்று திரண்டு கடுமையான யாகங்களையும் நடத்தியுள்ளனர்.
சாத்வி பிரசாரம்
அதே நேரத்தில் ஒரிஜினல் இந்துத்துவாவாதியான சாத்வி பிரக்யாசிங்கோ, ஏப்ரல் 19-ந் தேதிதான் பிரசாரத்தை தொடங்கினார். மொத்தம் 21 இந்து மடங்களுக்கு மட்டும் சென்று வாக்கு சேகரித்தார் பிரக்யாசிங். அவரும் கூட திக்விஜய்சிங் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய விநாயகர் கோவிலில் இருந்துதான் ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.