"அவதார புருஷன்.." ராமர், கிருஷ்ணர் போல பிரதமர் மோடியும் கடவுளின் அவதாரம்.. சொல்கிறார் பாஜக அமைச்சர்
போபால்: பிரதமர் மோடியைப் புகழ்ந்து மத்தியப் பிரதேச விவசாய துறை அமைச்சர் கமல் படேல் பேசியுள்ளது இப்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மூத்த பாஜக தலைவர்களில் ஒருவர் கமல் படேல். பள்ளி காலத்தில் இருந்தே பாஜகவில் ஈடுபாடு கொண்ட இவர் பாஜகவின் மாணவர் அமைப்பிலும் இருந்தவர்.
1993ஆம் ஆண்டு முதல் பாஜக சார்பில் இவர் மத்தியப் பிரதேச சட்டசபைக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு அமைந்த போது இவர் வேளாண் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
மேடையிலேயே பேசிய ஐஸ்வர்யா.. 2 மாதத்தில் தலைகீழாக மாறிய உறவு.. தனுஷுக்கு சென்ற புகார்? பின்னணி
கடவுளின் அவதாரம்
இந்நிலையில், இன்று அவர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய பேச்சு தான் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை "கடவுளின் அவதாரம்" என்று குறிப்பிட்ட கமல் படேல், காங்கிரசின் ஊழல் மற்றும் நாட்டின் கலாசாரத்தை சிதைக்கும் அட்டூழியங்கள் அதிகரித்ததால், அவர்களை முடிவுக்குக் கொண்டு வரக் கடவுளின் அவதாரமாகவே பிரதமர் நரேந்திர மோடி பூமியில் பிறந்தார் என்று கூறினார்.
முன்னோர்கள் சொல்வது
இது தொடர்பாக ஹர்தாவில் செய்தியாளர்களிடம் கமல் படேல், "விஷ்வ குரு போலப் பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டை சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார். அவர் இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிக்கவும் சாதாரண உழைக்கும் மக்களின் நலனை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நமது நாட்டில் நெருக்கடியும், கொடுங்கோல் ஆட்சி முறையும் அதிகரித்த போதெல்லாம், கடவுள் மனித வடிவில் அவதாரம் எடுப்பார் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
ராமர், கிருஷ்ணர்
மனித உருவில் அவதாரம் எடுத்த ராமர், அசுரனான ராவணனைக் கொன்றார். வேறு சில தீய சக்திகளையும் வென்று, மக்களைப் பாதுகாத்து அவர் 'ராமராஜ்யத்தை' ஏற்படுத்தினார். அதேபோல கம்சனின் அட்டூழியங்கள் அதிகரித்தபோது, பகவான் கிருஷ்ணர் பிறந்து கம்சனின் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவந்தார், அவர்கள் இருவரின் தலைமையில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.
மோடி அவதரித்தார்
அதேபோல், காங்கிரஸின் அட்டூழியங்கள் அதிகரித்தபோது ஊழல், ஜாதி வெறி அதிகரித்த போது, நாட்டின் கலாசாரம் சீரழிக்கப்பட்டு மக்களிடையே விரக்தி நிலவியபோது, அதை முடிவுக்குக் கொண்டுவர நரேந்திர மோடி பிறந்தார். ஊழலற்ற ஆட்சியை வழங்கும் பிரதமர் மோடியின் தலைமையில் சாதாரண மக்களும் கூட நிம்மதியாக வாழ்கின்றனர். இவையெல்லாம் சாதாரண மனிதனால் செய்ய முடியாத காரியங்கள்.
அவதார புருஷன்
அப்படி சாதாரண மனிதரால் இவற்றைச் செய்ய முடியும் என்றால் ஏன் கடந்த 60 ஆண்டுகளில் இதை யாராலும் செய்ய முடியில்லை. எனவே, என்னால் உறுதியாகக் கூற முடியும் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அவதார புருஷன். சாத்தியமற்ற செயல்களைச் செய்யும் கடவுளின் அவதாரம் அவர்" என்று கமல் படேல் கூறினார். இவரது பேச்சு தான் இப்போது இணையதளங்களில் டிரெண்டங்கில உள்ளது. கமல் படேல் இதுபோல பேசுவது இது முதல்முறை இல்லை.
ராபின்ஹூட்
முன்னதாக இதே கமல் படேல் தான் கடந்த நவம்பர் மாதம் மத்தியப் பிரதேச முதல்வர் சிங் சவுகானை ராபின்ஹூட் எனப் புகழ்ந்திருந்தார். அவர் கூறுகையில், "ராபின்ஹூட் பணக்காரர்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளை அடித்து, அதை ஏழை மக்களுக்கு வழங்குவார். நமது முதல்வர் கொள்ளை அடிக்க மாட்டார். ஆனால், பணக்காரர்களிடம் வரியை வசூலித்து அதை ஏழை மக்களுக்கு வழங்குவார்" என்று தெரிவித்தார்.