ஈயத்தை ஆய்வு செய்யும் வசதி அரசு ஆய்வகங்களில் இல்லை: மேகி தடையை நீக்குக- நெஸ்லே
மும்பை: அரசு ஆய்வகங்களில் ஈயத்தை சோதனை நடத்தும் அளவுக்கு வசதி இல்லை என்று நெஸ்லே நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், அஸ்ஸாம், பீகார், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், குஜராத், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது.

தடையை எதிர்த்து நெஸ்லே மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நெஸ்லே தரப்பு வழக்கறிஞர் கூறுகையில்,
மேற்கு வங்கம், புனே, டெல்லி ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆய்வகங்களில் ஈயத்தை ஆய்வு செய்ய போதிய வசதி இல்லை. ஒரே பேட்ச்சை சேர்ந்த மாதிரிகளை இரு வேறு ஆய்வகங்களில் ஆய்வு செய்தபோது 2 வகை முடிவுகள் கிடைத்தன. அதனால் மேகி நூடுல்ஸுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
தடை விதிக்கப்பட்டதை அடுத்து பல நூறு கோடி மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிமெண்ட் ஆலைகளில் வைத்து அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications