காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படுமா?- சபாநாயகர் விளக்கம்
லோக்சபாவில் நேற்று புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒருமனதா தேர்ந்தெடுக்கப்பட்டார். சபை நடவடிக்கைகள் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசினார்.
அப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கான எம்.பி.க்கள் பலம் இல்லாத காங்கிரஸூக்கு அந்த அந்தஸ்து அளிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சுமித்ரா மகாஜன், இது குறித்து நாங்கள் விவாதித்து முடிவெடுப்போம். இந்த விஷயத்தில் சில முன்னுதாரணங்கள் உள்ளன. அவற்றை நான் ஆராய வேண்டியுள்ளது.
தற்போதைய, குறுகிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் லோக்சபா துணைத் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படாது. அடுத்ததாக பட்ஜெட் கூட்டத்தொடர் கூட உள்ளது. ஜூலை 28ந் தேதிக்கு முன் பட்ஜெட் நிறைவேறுவதற்கு சபையின் அனைத்துத் தரப்புகளிடையே ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது' என்று மட்டும் கூறினார்.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா? கிடைக்காதா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.