மகாராஷ்டிரா: சிவசேனாவின் 10 பேர் உள்பட 20 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
மும்பை: மகாராஷ்டிரா பாஜக அரசில் சிவசேனா கட்சி நேற்று இணைந்தது. அக்கட்சியைச் சேர்ந்த 10 பேர் உள்பட 20 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், பிரதான கட்சிகள் அனைத்தும் தனித்து தேர்தலை சந்தித்தன. மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளில் பாரதிய ஜனதா 122 தொகுதிகளில் வெற்றி தனிபெரும் கட்சியாக விளங்கியது. ஆனால் ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்பதால் 63 இடங்களில் வெற்றி பெற்ற தனது பழைய கூட்டணிக் கட்சியான சிவசேனாவுடன் கூட்டணி அரசு அமைக்க பாஜக நடத்திய முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனால் அக்டோபர் 31-ந் தேதி பாஜக தனித்து மைனாரிட்டி அரசை அமைத்தது. அப்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் 10 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது.
ஆளுநரின் உத்தரவின் பேரில் கடந்த மாதம் 12-ந் தேதி பாஜக அரசு நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டசபையில் பங்கேற்பதை தவிர்த்து தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. பின்னர் தேசியவாத காங்கிரஸ், பாஜக அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தது.
இதனால் நிலையான அரசை அமைத்து கொள்ள சிவசேனாவுடன் பாஜக மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதில் பாஜக அரசில் பங்கேற்க சிவசேனா சம்மதம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் சட்டசபை வளாகத்தில் நடைபெற்றது. மொத்தம் 20 பேர் நேற்று பதவி ஏற்றனர். இதில் பாஜக மற்றும் சிவசேனா சார்பில் தலா 10 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
இதில் இரு கட்சிகள் சார்பிலும் தலா 5 பேர் கேபினட் அமைச்சர்கள், தலா 5 பேர் இணை அமைச்சர்கள் ஆவர்.