மகாராஷ்டிரா: ஆட்சி அமைக்க பாஜக தீவிரம்- டெல்லி சென்றார் பட்னாவிஸ்! காங். எம்.எல்.ஏக்களும் வலைவீச்சு!
மும்பை: மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனாவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக ஆலோசிக்க மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி விரைந்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே முகாமிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் வேற முகம் காட்டிய சிவசேனா..வெலவெலத்த அதிருப்தி கோஷ்டிக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு
உச்சநீதிமன்றம் தடை
ஏக்நாத் ஷிண்டே கோஷ்டியில் உள்ள 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முதல்வர் உத்தவ் தாக்கரே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜூலை 11-ந் தேதி வரை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டோம் என்றும் உச்சநீதிமன்றத்தில் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அரசியல் குழப்பம்
இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களில் தங்களுடன் 20 பேர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்; 20 எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்கள் அணிக்கே திரும்புவர் என்கிறது உத்தவ் தாக்கரே கோஷ்டி. அதேநேரத்தில் மகாராஷ்டிரா சட்டசபையில் ஆளும் சிவசேனா அரசு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்றோ அல்லது ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றோ பாஜக தீவிரமாகவும் வலியுறுத்தவில்லை. அதேபோல் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படவும் இல்லை. இதனால் மகாராஷ்டிராவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் தொடருகிறது.
பட்னாவிஸ் டெல்லி பயணம்
தற்போது மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பட்னாவிஸ் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பது
தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
பாஜக பேரம்
இதனை உறுதி செய்யும் வகையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் பாஜக வளைக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. நசீர் ஹுசைன் கூறுகையில், கடந்த சில நாட்களாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக தரப்பு பேரம் பேசி வருகிறது. தேசியவாத காங்கிரஸ், சுயேட்சை எம்.எல்.ஏக்களுடனும் பாஜக பேரம் பேசி வருகிறது. மகாராஷ்டிராவில் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. அப்படி பெரும்பான்மை இல்லை என கூறுபவர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தயாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.