“அதெப்படி டீ மட்டும் தரலாம்.. டிபன் எங்கே?”.. கோபத்தில் மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாமனார்!
காலைச் சிற்றுண்டி தராததற்காக மருமகளை மாமனார் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தானே: காலைச் சிற்றுண்டி கொடுக்காத ஆத்திரத்தில் மாமனார், தனது மருமகளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
பெண்கள் என்னதான் விமானமே ஓட்டி விட்டு வந்தாலும், வீட்டுக்குள் நீ தான் டீ போட்டுக் கொடுக்க வேண்டும் என்ற மனநிலை இப்போதும் பல வீடுகளில் உள்ளது. அவரவர் வயிற்றுக்குத் தேவையான சம்பாத்தியத்தை இருபாலரும் சம்பாதித்தாலும்கூட, இப்போதும் பல வீட்டில் சமையல் என்பது பெண்களுக்கானதாகவே பார்க்கப்படுகிறது. முன்பைவிட இந்த நிலைமை இப்போது கொஞ்சம் மாறி இருப்பது ஆறுதல் அளித்தாலும், சமையல் சரிவர செய்யாததை ஒரு குற்றமாகக் கருதி, பெண்களின் உயிரையே எடுக்கும் அதிர்ச்சி சம்பவங்களும் இன்னமும் தொடரத்தான் செய்கிறது.
உப்புமாவில் உப்பு கூடியதற்காக கொலை, பிரியாணி சரிவர செய்து தராததால் கொலை, சிக்கன் சமைக்கத் தெரியவில்லை எனக் கொலை என பெண்களின் உயிரோடு விளையாடும் ஆண்களைப் பற்றியச் செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் பார்க்க முடிகிறது.
அந்த வரிசையில், காலைச் சிற்றுண்டி செய்து தராத ஆத்திரத்தில் மருமகளை மாமனார் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கொடூரச் சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமனார் கோபம்
மகாராஷ்டிரா தானே மாவட்டம் ரபோடி ருத்து பார்க் பகுதியைச் சேர்ந்தவர் சீமா பாட்டீல் (42). இவரது மாமனார் காசிநாத் பாட்டீல் (76) ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த வியாழனன்று காலை 11.30 மணியளவில் மாமனாருக்கு டீ போட்டுக் கொடுத்துள்ளார் சீமா. காலைச் சிற்றுண்டியை எதிர்பார்த்துக் காத்திருந்த காசிநாத் இதனால் ஆத்திரமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு
காலைச் சிற்றுண்டி தொடர்பாக மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. கோபத்தில் நிதானம் இழந்த காசிநாத், துப்பாக்கியை எடுத்து தனது மருமகளை நோக்கி சுட்டுள்ளார். இதில் வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்துள்ளார் மருமகள்.

பரிதாபம்
இந்த சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர், உடனடியாக சீமாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், வெள்ளியன்று காலை சீமா பாட்டீல் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேடுதல் வேட்டை
இதற்கிடையே, மருமகளை துப்பாக்கியால் சுட்ட காசிநாத், போலீசுக்கு பயந்து உடனடியாக வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். எனினும் சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு மருமகள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் காசிநாத் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள காசிநாத் பாட்டீலை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications