மேகி நூடுல்ஸில் ரசாயன பொருளே இல்லையாம்... சொல்கிறார் மகா. அமைச்சர்
மும்பை : மேகி நூடுல்சில் ரசாயனப் பொருட்கள் எதுவும் இல்லை என்று மகாராஷ்ட்ர மாநில அமைச்சர் கிரிஷ் பாபட் கூறியுள்ளார்.
நெஸ்லே இந்தியா நிறுவனம் தயாரித்து வெளியிடும் மேகி நூடுல்சில் ரசாயன பொருள் கலந்திருப்பதாக நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதையடுத்து, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மேகி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித் மற்றும் பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்ய பீகார் மாநில நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்சினை மகாராஷ்ட்ராவிலும் எதிரொலித்தது.
மேகி நூடுல்சின் மாதிரிகளை மகாராஷ்ட்ர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இது குறித்து பேட்டியளித்த அம்மாநில உணவு மற்றும் சிவில் சப்ளைத்துறை அமைச்சர் கிரிஷ் பாபட், மேகியில் ரசாயன பொருள் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.
எனினும், மேற்கொண்டு நடத்தப்படும் ஆய்வில் ஏதாவது தவறுகள் கண்டறியப்பட்டால், நெஸ்லே இந்தியா நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கிரிஷ் பாபட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.