கிளம்பிய புது சர்ச்சை! அனுமன் எங்கே பிறந்தார்.. மகாராஷ்டிராவா? கர்நாடகாவா? நேரடியாக தலையிட்ட போலீஸ்
டெல்லி: கிருஷ்ண ஜென்ம பூமி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அனுமன் பிறந்த இடம் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
ராமர் பிறந்ததாகக் கருதப்படும் அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த கட்டுமான பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல மதுராவில் உள்ள ஷாஹி இத்கா என்ற மசூதி அருகே தான் கிருஷ்ண ஜென்ம பூமி அமைந்துள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மாநாடு
இந்தச் சூழலில் மற்றொரு இந்து கடவுள்களில் ஒருவரான ஹனுமான் பிறந்த இடம் குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், மஹந்த் ஸ்ரீ மண்டலாச்சார்யா பீடாதீஷ்வரரின் சுவாமி அனிகேத் சாஸ்திரி தேஷ்பாண்டே மகாராஜ் வரும் மே 31ஆம் தேதி இது குறித்து விவாதிக்க நாசிக்கில் தர்ம சன்சத் மாநாட்டிற்கு விடுத்துள்ளார். இந்த தர்ம சன்சத்தில், நாடு முழுவதும் இருந்து சாதுக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கே
இந்த மாநாட்டில் அவர்கள் அனைவரும் ஹனுமான் பிறந்த இடம் குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள். இந்த மாநாட்டில் எடுக்கப்படும் எந்த முடிவும் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சுவாமி அனிகேத் கூறினார். மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் தான் அனுமன் பிறந்ததாக நம்பப்படுகிறது. இருப்பினும், சமீபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த துறவி ஒருவர், அனுமன் நாசிக்கில் உள்ள அஞ்சனேரியில் பிறக்கவில்லை என்றும் அனுமன் கர்நாடகாவின் கிஷ்கிந்தா பகுதியில் தான் பிறந்தார் என்றும் கூறினார்.

வால்மீகி ராமாயணம்
வால்மீகி ராமாயணத்தைக் குறிப்பிட்டு ஹனுமான் கிஷ்கிந்தாவில் தான் பிறந்தார் என்று மஹந்த் கோவிந்த் தாஸ் தெரிவித்தார். ராமாயணத்தில் ஹனுமான் நாசிக் அஞ்சநேரியில் பிறந்ததாக வால்மீகி எங்கும் எழுதவில்லை என்று குறிப்பிட்ட அவர், பிறந்த இடம் எப்போதும் ஒரே இடமாகத் தான் இருக்கும் என்றும் ஹனுமான் நாசிக்கின் அஞ்சநேரியில் பிறந்ததாக எங்கும் எழுதப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அனுமன் மாநாடு
வேதத்தில் கூறப்பட்டு உள்ளதன் படி அனுமான் பிறந்த இடம் குறித்து நாசிக்கில் உள்ள இந்து துறவிகள் உடனும் அவர் விவாதிக்கிறார். இந்தச் சூழலில் தான், வரும் மே 31ஆம் தேதி அனுமன் பிறந்த இடம் குறித்து விவாதிக்க மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாசிக் காவல் துறையினர் சட்டம் ஒழுங்கை பராமரிக்குமாறு அமைப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications