தேசத்தின் ’மகன்’ மகாத்மா காந்தி... சாத்வி பிரக்யாசிங் எம்.பி.யின் புதிய சர்ச்சை
போபால்: மகாத்மா காந்தி இந்த தேசத்தின் மகன் என பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்த கருத்து சர்ச்சையாகி உள்ளது.
லோக்சபா தேர்தலின் போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கியவர் சாத்வி பிரக்யாசிங் தாக்கூர். இதனால் தேர்தல் ஆணையம் அவருக்கு கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தியாகியாக புகழ்ந்து பேசிய மற்றொரு சர்ச்சையில் சிக்கினார் சாத்வி பிரக்யாசிங். தற்போது பாஜக நடத்தி வரும் மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் யாத்திரையில் சாத்வி பிரக்யாசிங் கலந்து கொள்ளாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
காங்கிரசுக்கு வாக்களிக்க வருபவர்கள் தடுத்து நிறுத்தம்... கே.எஸ்.அழகிரி ஆவேசம்
இந்நிலையில் போபால் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் சாத்வி பிரக்யாசிங் கூறியதாவது; காந்தி இந்த தேசத்தின் மகன். அவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். அதற்கு மேல் எந்த விளக்கமும் நான் தரதேவை இல்லை.
இந்த தேசத்துக்காக யாரெல்லாம் பாடுபட்டார்களோ அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். மகாத்மா காந்தியின் கொள்கைகளின் படி நடப்பேன். எங்களுக்கு வழிகாட்டுதல்களை கொடுத்த தலைவர்களை நிச்சயம் நாங்கள் புகழ்வோம். அவர்களது பாதையை மக்களுக்காக பின்பற்றி நடப்போம் என்றார்.