தீவிரவாதத்தில் 'மேக் இன் இந்தியா': இது ஐஎஸ்ஐ-யின் புதிய திட்டம்- ஐ.பி. எச்சரிக்கை!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்த 'மேக் இன் இந்தியா' வேண்டுமானால் இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி நாடாக இந்தியா வளர வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கலாம். ஆனால் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப்பிரிவு அதேபோன்ற ஒரு பெயரில் தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்ற திட்டமிட்டுள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய உளவுப்பிரிவு, தேசிய பாதுகாப்பு ஏஜென்சி போன்றவை சேகரித்துள்ள பல தகவல்கள் நாட்டிற்கு எந்த மாதிரியான அச்சுறுத்தல்கள் உள்ளன என்பதை புடம் போட்டு காட்டுவதாக உள்ளது. இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்களில் கூறியதாவது:
வங்கதேசத்தில் தீவிரவாதம்
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் தனியாக பிரிந்து சென்றபிறகு, அந்த நாடு, இந்தியாவோடு நட்புணர்வோடு இருந்தது. ஆனால் இதை கெடுக்கும் நோக்கத்திலும், மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்திலும், வங்கதேசத்தில் தீவிரவாத அமைப்புகள் தலை தூக்கத் தொடங்கின.
அவாமிலீக் அசத்தல்
ஆனால் தற்போது வங்கதேசத்தில் அரசாட்சி செய்துவரும் அவாமிலீக், தனது மண்ணில் தீவிரவாதம் வளருவதை அனுமதிக்க முடியாது என்ற தீர்மானத்துக்கு வந்தது. இதையடுத்துதான், அந்த நாட்டில் இருந்த ஹூஜி, ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் வந்தன. இந்த தீவிரவாத அமைப்புகள் எல்லாம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மூலம் உருவானவை.
தீவிரவாதத்தில் மேக் இன் இந்தியா
வங்கதேசத்தின் இந்த நடவடிக்கையால், இந்திய அரசுக்கும், வங்கதேச அரசுக்கும் நல்லிணக்கம் உருவாகியுள்ளது. வங்கதேசம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சமீபகாலமாக இரு நாட்களும் நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளன. இதை கெடுக்க ஐஎஸ்ஐ அமைப்பு போட்டுள்ள திட்டம்தான் 'மேக் இன் இந்தியா' என்பது.
பகையை ஏற்படுத்த சதி
இந்த திட்டப்படி, வங்கதேசத்தை ஒட்டியுள்ள இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தை தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் இடமாக மாற்ற சதி தீட்டப்பட்டது. இங்கிருந்து உற்பத்தியாகும் தீவிரவாதம், வங்கதேசத்தில் தனது நாசவேலையை காட்ட வேண்டும் என்பது கட்டளை. இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்குள் ஊடுருவி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால், வங்கதேசத்திற்கு இந்த அரசு மீது அதிருப்தி ஏற்பட்டு இரு நாடுகளும் பகை நாடாகும். மேலும், பாகிஸ்தானை தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் நாடாக உலக நாடுகள் கருதும் போக்கில் மாற்றம் ஏற்பட்டு, இந்தியாவும் அதற்கு சற்றும் இளைத்தல்ல என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும் என்பது, ஐஎஸ்ஐ திட்டமாகும்.
மேற்கு வங்கத்தில் குடித்தனம்
மேக் இன் இந்தியா நாசவேலைக்காக நியமிக்கப்பட்டவர் பெயர் கவுசர் அலி. இவர்தான் ஜமாத்-உல்-முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் வங்கதேசம்-மேற்கு வங்கம் இடையேயான தூதுவராக செயல்பட்டுள்ளார். மேலும் மாஸ்டர் மைண்ட் எனப்படும் சாகுல் ஹுசைன் என்பவர் நான்காண்டுகளுக்கு முன்பே மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வந்து வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அங்கிருந்தபடி மால்டா, முர்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் எங்கெல்லாம் தீவிரவாதிகளை உருவாக்க முடியும், வெடிகுண்டுகளை எங்கு வைத்து தயாரிக்க முடியும் என்பது குறித்து ஆய்வு நடத்தி வந்துள்ளார்.
செவி சாய்க்காத காங்கிரஸ் அரசு
இந்த தகவல் 2011ல், அதாவது ஹுசைன் வந்து தங்கிய அதே ஆண்டில் இந்திய ஆய்வு மற்றும் பகுத்தாய்வு பிரிவு (ரா) அதிகாரிகளுக்கும் கிடைத்துள்ளது. இதையடுத்து ரா செயலாளர் விஷயத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இந்த தகவலை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மேற்கு வங்க மாநில அரசுடன் இணைந்து, ஹூசைனை கைது செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார். ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பணம் பட்டுவாடா
தீவிரவாதத்தை உற்பத்தி செய்ய பரிமாறப்பட்ட முதல் பணவர்த்தனை மதிப்பு ரூ.10 லட்சம் என்றும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. பண பரிவர்த்தனைகள் சில மதரசாக்களில் நடைபெற்றதாகவும் உளவுத்துறை தகவல் கூறுகிறது. வங்கதேச உளவுத்துறையும் இதை உறுதி செய்துள்ளது. இந்த பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தது ஐஎஸ்ஐ அமைப்புதான் என்றும் தகவல்கள் உறுதி செய்கின்றன.
பெரும் தாக்குதல் நடத்த திட்டம்
இதன்பிறகு கவுசர் அலி, ஹுசைன் கான் ஆகியோர் ரூ.80 லட்சம் பணத்தை ஒருமுறை பரிமாறிக்கொண்ட தகவலும் உள்ளது. இந்த பணத்தை கொண்டு பலருக்கும் மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக உருமாற்றத்தொடங்கியுள்ளனர் இந்த நபர்கள். 180 பேர் கொண்ட தீவிரவாத குழுவுடன் வங்கதேசத்திற்குள் ஊடுருவி பெரும் நாசவேலை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
சிமி, அல்-உம்மா ஆதரவு
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத், மால்டா தவிர நாடியா மாவட்டமும் தீவிரவாதிகளையும், வெடிகுண்டுகளை உற்பத்தி செய்யும் பகுதிதாக மாற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமான மதரசாக்கள் மட்டுமின்றி சிமி, அல்-உம்மா போன்ற இந்திய தீவிரவாத குழுக்கள் போன்றவை இந்த சதி திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
தலைவரே சாதாரணமாக சுற்றியுள்ளார்
வங்கதேசத்தின் ஜமா-உல்-முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீட் ரகுமான் கடந்த ஆண்டில் இருமுறை மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்துள்ளார். முர்ஷிதாபாத்தில் அவர் தங்கியபடி, சதிவேலைகளை மேற்பார்வையிட்டு திரும்பியுள்ளார். நிதி திரட்டும் வேலையை மிகுந்த பொறுமையாக செய்யும்படி அவர் கட்டளையிட்டும் சென்றுள்ளார். ஏனெனில் அப்போதுதான் யாருக்கும் சந்தேகம் ஏற்படாது என்பது அவர்கள் திட்டமாம். இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களை உலுக்கி வரும் சாரதா சிட்பண்ட் மோசடியிலும் இந்த ஜமா-உல்-முஜாகிதீன் கைவரிசை இருப்பதுதான்.