ராக்கி சாவந்தை முதல்வர் வேட்பாளர் ஆக்குங்கள்: சிவ சேனாவுக்கு ஆம் ஆத்மி பதிலடி
நாக்பூர்: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் குத்தாட்ட நடிகை ராக்கி சாவந்தை சிவசேனா கட்சி முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் எழுதிய தலையங்கத்தில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை குத்தாட்ட நடிகை ராக்கி சாவந்துடன் ஒப்பிட்டிருந்தார்.
கெஜ்ரிவால் அரசியலில் குத்தாட்ட நடிகை போன்று செயல்படுவதாகவும், ராக்கி சாவந்த் அதைவிட சிறப்பாக ஆட்சி செய்வார் என்றும் தாக்கரே விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷ்டிர மாநில ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி தமானியா பதிலடி கொடுத்துள்ளார். நாக்பூரில் செய்தியாளர்களிடையே பேசிய அஞ்சலி தமானியா கூறியதாவது:
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், கொள்ளைக் காரர்களின் கட்சி. இரண்டாவது மோசமான கட்சி,சிவசேனா" என்று கடுமையாக சாடினார்.
மேலும்,ராக்கி சாவந்த் மீது தாக்கரே அதுபோன்ற உயர்ந்த மரியாதை வைத்திருந்தால், அவரை சட்டசபைத் தேர்தலில் சிவ சேனாவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் தமானியா கூறினார்.
ஆம் ஆத்மியின் முக்கிய இலக்காக, நாக்பூரில் பா.ஜனதா வேட்பாளர் நிதின் கட்காரியை எதிர்த்து தமானியா போட்டியிட முடிவு செய்திருந்தார். பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்ட தமானியா, கட்சி வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.
நாக்பூர் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி தமானியாவிடம் கேட்டபோது, "ஒரு சாதாரண மனிதன் எங்கள் வேட்பாளராக நிறுத்தப்படுவார், அவர் கட்காரியை தோற்கடிப்பார்.
நாக்பூரில் கட்காரிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் நாக்பூர் மற்றும் இந்தூரில் ஒரே சமயத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். நாங்கள் அவருக்கு எதிராக நாக்பூரில் மட்டும் வேட்பாளரை நிறுத்துவோம்"என்றார்.