மே. வங்கத்தில் பாஜக தலையெடுப்பதைத் தடுக்க காங்கிரஸ்- திரிணாமுல்- இடதுசாரிகள் கூட்டணி?
டெல்லி / கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்றுவதைத் தடுக்கும் வகையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கக் கூடும் எனத் தெரிகிறது.
மேற்கு வங்கம் இடதுசாரிகளின் கோட்டையாக 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக திகழ்ந்தது. 2011ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் இடதுசாரிகள் சகாப்தம் முடிவுக்கு வந்தது.
அந்த தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 184 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்ற அக்கட்சித் தலைவர் மமதா பானர்ஜி முதல்வரானார். கடந்த லோக்சபா தேர்தலிலும் கூட மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 34ஐ கைப்பற்றியது.
விஸ்வரூபமெடுக்கும் பாஜக
இந்த மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரு தொகுதியைக் கைப்பற்றி பாஜக முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்துள்ளது. அத்துடன் 2016 சட்டசபை தேர்தலில் கணிசமான இடங்களைப் பெறவும் பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
கட்டாயத்தில் மதச்சார்பற்ற கட்சிகள்
இதனால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் நிலை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி இம்மாநிலத்தில் தலையெடுப்பதைத் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸும் இடதுசாரிகளும் இருக்கின்றன.
நேருவை முன்வைத்து காய் நகர்த்தல்
லோக்சபா தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் அமைதியாக இருந்து வந்தது. தற்போது நேருவின் 125வது பிறந்த நாளை முன்வைத்து அரசியல் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது அக்கட்சி.
மமதா, பிரகாஷ் காரத்
டெல்லியில் வரும் 17,18- ஆகிய தேதிகளில் பிரம்மாண்டமாக நேரு பிறந்த நாளைக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது காங்கிரஸ். இந்த நிகழ்ச்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா என பல்வேறு தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஓரணியில் திரள்வோம்
இந்த அழைப்பை மமதா பானர்ஜியும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டிய தருணமிது என்றும் மமதா கூறியுள்ளார்.
2 ஆண்டுக்கு பின்னர் சந்திப்பு
2012ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக் கொண்ட பின்னர் தற்போதுதான் சோனியாவை மமதா சந்திக்க இருக்கிறார்.
காரத்துக்கு நெருக்கடி
லோக்சபா தேர்தல் தோல்வியால் மார்க்சிஸ்ட் பொதுச்செயலர் பிரகாஷ் காரத்துக்கும் கட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் அழைப்பை ஏற்று இடதுசாரித் தலைவர்களும் நேரு விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதன் மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ்- திரிணாமுல்- இடதுசாரிகள் நெருங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
திரிணாமுல் காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவதற்கு அம்மாநில காங்கிரசார் முன்வருவார்களா? காலகத்தின் கட்டாயம் என்று இடதுசாரிகள் அணிசேருவார்களா? என்ற கேள்விகளுக்கு இனிவரும் நாட்களில் விடை கிடைக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.