ஆக்சிஜனுக்காக 24 மணி நேரம்.. 1,300 கி.மீ. பயணம்.. கொரோனாவை வீழ்த்திய உயிர் 'நட்பு'
ராஞ்சி: நண்பனுக்காக ஒருவன் இத்தனை ரிஸ்க் எடுக்க முடியுமா என்று வியக்க வைத்தது மட்டுமின்றி, நமக்கு இப்படியொரு நண்பன் கிடைக்காம போயிட்டானே என்று ஏங்கவும் வைத்திருக்கிறார் ஒருவர்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை, மிகத் தீவிரமாக உள்ளது. வெளிநாடுகள் உதவி செய்யும் அளவுக்கு நிலைமை வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளது.
ஆக்சிஜன் தான் இந்தியாவின் இன்றைய பிரதான தேவை. அதன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்கள் தினம் அதிகரித்து வருகிறது. உயிர்மூச்சை இழுத்து வைத்துப் பிடித்துக் கொண்டு கண்களில் மரண பயத்துடன் அமர்ந்திருக்கும் சூழலை பல மருத்துவமனை வாயில்களில் நாம் காண முடிகிறது.

ஆக்சிஜன் தேவை
இந்த நிலையில், தன் நண்பனுக்காக ஆக்சிஜன் சுமந்து கொண்டு 1,300 கி.மீ பயணம் செய்த நபர் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் தேவேந்திர குமார் ஷர்மா. கடந்த ஏப்ரல் 24ம் தேதி அவரது நண்பர் சஞ்சய் சக்சேனாவிடம் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. அதில், உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மருத்துவமனையில், கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றுவரும் இருவரின் பொதுவான நண்பரான ராஜனுக்கு விரைவில் ஆக்சிஜன் தேவை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

டூ-வீலரில் பயணம்
இன்னும் 24 மணி நேரத்தில், ராஜனின் ஆக்சிஜன் சப்ளை முடிந்துவிடும் என்றும், தொடர்ந்து நிலவும் தட்டுப்பாடு காரணமாக, குடும்பத்தினரால் ஆக்சிஜன் ஏற்பாடு செய்ய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் தேவேந்திர குமாருக்கு கிடைத்தவுடன், இரவோடு இரவாக தனது டூ-வீலரில் பொகாரோ நகருக்கு கிளம்பினார்.

கிடைத்தது ஆக்சிஜன்
அங்கு பல இடங்களில் ஆக்சிஜன் தேடியும் கிடைக்காமல், இறுதியாக, ஜார்கண்ட் எரிவாயு ஆலையின் உரிமையாளர் ராகேஷ் குமார் குப்தாவை தொடர்பு கொண்டார். ராகேஷ் அவருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியது மட்டுமல்லாமல், அவரிடமிருந்து பணம் வாங்கவும் மறுத்து, முதலில் நண்பரை கவனிக்கச் சொல்லி அனுப்பிவிட்டார்.

சரியான நேரத்தில் உயிர்மூச்சு
சிலிண்டர் வாங்கியாச்சு! ஆனால், இன்னும் 1,300கி.மீ பயணம் செய்ய வேண்டும் அதைக் கொண்டு சேர்க்க. அதுவும் 24 மணி நேரத்தில்.. இதன் பிறகு, தனக்கு தெரிந்த ஒருவரின் காரில் பயணம் செய்த தேவேந்திரா, 1,300 கி.மீட்டரை 24 மணி நேரத்தில் பயணித்து, ஏப்ரல் 26ம் தேதி மருத்துவமனையை அடைந்தார். சரியான நேரத்தில், ராஜனுக்கு ஆக்சிஜனும் கிடைக்க, இப்போது அவர் உடல் நலத்துடன் உள்ளார்.












Click it and Unblock the Notifications