நேதாஜியைக் கண்டுபிடிக்க பொதுநல வழக்கு தொடுத்த வக்கீலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோசை கண்டுபிடிக்க வேண்டும் என பொதுநல வழக்குத் தாக்கல் செய்த வக்கீலுக்கு சுப்ரீம் கோர்ட் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
‘இந்திய தேசியப் படை' அமைத்து இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர் சுபாஷ் சந்திரபோஸ். ஜெர்மனி, ஜப்பான் நாடுகளின் உதவியோடு பெரும் படையை திரட்டி ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சுபாஷ் சந்திரபோஸ், கடந்த 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த நேரத்தில் திடீரென மாயமானார்.
சுபாஷ் சந்திரபோஸ் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதாகவும், அதில் அவர் மரணம் அடைந்து விட்டதாக ஒரு தரப்பினரும், இல்லையில்லை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அவர் வயதான வரை வாழ்த்து இறந்ததாக ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
ஆனால், சுபாஷ் சந்திரபோசின் சடலம் மீட்கப்படாததால் உண்மையில் நடந்தது என்ன என்று இதுவரை எதுவும் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே, சுபாஷ் சந்திரபோசை கண்டுபிடிக்கக் கோரி நாடெங்கும் பல கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்ட்டு, பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், பொதுநல வழக்குகள் போடுவதில் புகழ் பெற்ற வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ‘‘சுபாஷ் சந்திரபோஸ் எங்கு சென்றார்? என்ன ஆனார் என்பதை கண்டுபிடித்து சொல்ல வேண்டும்'' என்று கூறி இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், நர்மன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது மனுதாரரான எம்.எல்.சர்மாவே கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார். போசை கண்டுபிடிக்க ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தது பற்றியும் அவர் நீதிபதிகளிடம் விளக்கிப் பேசினார்.
சர்மாவின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த மனு நம்பிக்கைக்கு உரியதோ விசாரணைக்கு உரியதோ அல்ல. பல தடவை இந்த விவகாரத்தில் பதில் கூறப்பட்டு விட்டது. எனவே கோர்ட்டின் நேரத்தை வீண் செய்ததற்காக சர்மாவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது'' எனத் தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சர்மா, ‘தன்னிடம் அவ்வளவு பணம் இல்லையென்றும், தெரியாமல் பொது நல வழக்கு தொடுத்து விட்டேன். எனவே, அபராதத் தொகையை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்' என மன்றாடினார்.
இதையடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
இதற்கு முன்னர் சமீபத்தில் வேறொரு வழக்கிலும் தேவையில்லாமல் பொதுநல வழக்கு தொடர்ந்ததற்காக சர்மாவுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.