மணிப்பூர்: 30 ஆண்டுகால மதுவிலக்கு கொள்கையை கைவிட்ட பாஜக அரசு! அந்த 'சாராய அமைச்சர்' யாராம்?
இம்பால்: மணிப்பூரில் 30 ஆண்டுகால மதுவிலக்கு கொள்கையை கைவிட்டது அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு. தமிழ்நாட்டில் டாஸ்மாக் இருப்பது போல மதுபான தயாரிப்பு, விற்பனையை ஒழுங்குபடுத்த அரசு நிறுவனம் ஒன்றையும் அம்மாநில பாஜக அரசு உருவாக்கி உள்ளது.
இந்தியாவில் மதுவிலக்கு அமலில் இருந்த மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்று. 1970களில் இருந்தே மணிப்பூரில் மதுவிலக்குக்கான போராட்டங்கள் தொடங்கின. ஆனால் 1991-ம் ஆண்டு முதல்தான் மணிப்பூரில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பாரம்பரிய மது தயாரிப்புக்கும் அனுமதிக்கப்பட்டு வந்தது.

மணிப்ப்பூர் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மணிப்பூரில் பாதியளவு தளர்த்தி மதுபான கடைகளைத் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்திருந்தது. தற்போது மணிப்பூரில் முழுமையாக மதுவிலக்கு கொள்கையை தளர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மணிப்பூர் அமைச்சரவை வழங்கி இருக்கிறது.
மணிப்பூரில் சட்டவிரோத கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு மதுவிலக்கை கைவிடுவது என முடிவு செய்துள்ளதாம். மேலும் தமிழ்நாட்டில் மதுபான விற்பனை, கொள்முதலுக்கான டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவது போல மணிப்பூர் மாநிலத்தில் மணிப்பூர் மதுபானங்களுக்கான அரசு நிறுவனம் MSBCL உருவாக்கப்பட்டுள்ளது.
இதனிடயே மணிப்பூரில் பாஜக அரசு மதுவிலக்கு கொள்கையை கைவிட்டு டாஸ்மாக் பாணி நிறுவனம் உருவாக்கப்படுவது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மதுபானங்கள் விற்பனை குறித்து பேசும் போதெல்லாம் 'சாராய அமைச்சர்' என பாஜகவினர் விமர்சிப்பதும் வழக்கம். இதனை முன்வைத்து மணிப்பூரில் பாஜகவின் சாராய அமைச்சர் யார்? என்கிற விமர்சனங்களும் சமூகவலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications