கோவா தேர்தல்: கேட்டது கிடைக்கவில்லை.. பாஜகவிலிருந்து விலகினார் மனோகர் பாரிக்கரின் மகன்!
பனாஜி: கோவா முன்னாள் முதல்வர் மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர் பாஜகவிலிருந்து விலகினார். வரும் கோவா சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் 13 தொகுதிகளில் பாஜகவும், 17 தொகுதிகளில் காங்கிரஸும் 3 தொகுதிகளில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் வென்றது. அது போல் உள்ளூர் கட்சியான மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி 3 தொகுதிகளிலும் வென்றது. இந்த மாநில சட்டசபையின் பெரும்பான்மை பலம் 21 ஆகும்.
பாஜ அரசு vs விவசாயிகள்... உச்சமடையும் விவசாயிகள் போராட்டம்... திணறும் தலைநகர்
இந்த நிலையில் வெறும் 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக , அங்கிருக்கும் உதிரி கட்சிகள், சுயேச்சைகளின் துணை கொண்டு ஆட்சி அமைக்க ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் உரிமை கோரியது. இதையடுத்து பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது.
காலமானார் மனோகர் பாரிக்கர்
இந்த நிலையில் மனோகர் பாரிக்கர் கடந்த 2019ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் இருந்து வருகிறார். இந்த மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதம் முடிவடைகிறது. இந்த நிலையில் கோவா சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 40 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என 4 முனை போட்டி நிலவுகிறது.
பனாஜி சட்டசபை தொகுதி
இந்த நிலையில் தனது தந்தை மனோகர் பாரிக்கர் போட்டியிட்டு தேர்வான பனாஜி தொகுதியை தனக்கு வழங்குமாறு அவரது மகன் உத்பால் பாரிக்கர் பாஜக தலைமையிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நேற்றைய தினம் கோவா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பாஜக அறிவித்தது. அதில் பனாஜி தொகுதி தற்போதைய எம்எல்ஏ அடானாசியோ மான்ஸேரேட்டிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
அதிருப்தி அடைந்த உத்பால்
இதனால் உத்பால் பாரிக்கர் அதிருப்தி அடைந்தார். பின்னர் பாஜகவிலிருந்து விலகுவதாக இன்றைய தினம் அறிவித்துள்ளார். மேலும் பனாஜி தொகுதியில் தனித்து போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து உத்பால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் பாஜகவிலிருந்து விலகினேன்.
சுயேச்சை வேட்பாளர்
பனாஜி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறேன். பாஜகவிலிருந்து விலகியது எனக்கு கடினமான முடிவாகத்தான் இருந்தது. ஆனால் இதை கோவா மக்களுக்காக நான் செய்தேன். எனது அரசியல் எதிர்காலம் குறித்து யாரும் கவலைப்படவில்லை. அதை கோவா மக்கள் செய்வர். பனாஜி எம்எல்ஏவாக என்னை தேர்வு செய்வது குறித்து கோவா மக்கள் முடிவு செய்யட்டும். எனது கட்சியிடம் பேரம் பேச ஒன்றுமில்லை என்றார். ஆனால் பாஜக தலைமையோ உத்பாலை சமாதானப்படுத்தி வருவதாகவும் அவருக்கு வேறு ஒரு தொகுதியை ஒதுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.