பாக். போரின் ஹீரோவான அர்ஜன் சிங்கின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் நாளை இறுதி சடங்கு
பாக. போரின் ஹீரோவான அர்ஜன் சிங்கின் உடலுக்கு நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறுகிறது.
டெல்லி: பாகிஸ்தான் போரின் போது தீரத்துடன் செயல்பட்ட இந்திய விமான படையின் தலைமை தளபதியாக இருந்த அர்ஜன் சிங்கின் உடலுக்கு நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன.
இந்திய விமான படையின் தலைமை தளபதியாக இருந்தவர் அர்ஜன் சிங். இவருக்கு சனிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்துவிட்டார். அவருக்கு வயது 98.

அவரது இறுதி சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவருக்கு டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் இறுதி மரியாதை செய்யப்படுகிறது. அப்போது டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரின்போது ஜம்முவில் உள்ள முக்கிய நகரமான அக்னூரைக் கைப்பற்ற ஆபரேஷன் கிராண்ட் ஸ்லாம் என்ற நடவடிக்கையை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டது.
அப்போது, இந்திய விமானப் படை வீரர்களை தீரத்துடனும், திறனுடனும் வழிநடத்திய அர்ஜன் சிங், பாகிஸ்தான் படையினரை பின்வாங்கச் செய்தார். இதனால் அர்ஜன் சிங்கிற்கு இந்திய விமானப் படையிலேயே உயர் பதவியான விமானப் படை மார்ஷல் பதவி கடந்த 2002-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது, ராணுவத்தின் ஃபீல்டு மார்ஷல் பதவிக்கு நிகரானதாகும். இந்திய விமானப் படையில் 5 நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட ஒரே அதிகாரியும், அர்ஜன் சிங்தான்.
கடந்த 1964 முதல் 1969, ஜூலை 15-ஆம் தேதி வரை விமானப் படை தலைமை தளபதியாக பதவி வகித்த இவர், பின்னர் ஸ்விட்சர்லாந்து மற்றும் வாடிகனுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றினார். அதன்பிறகு, கென்யாவுக்கான இந்திய தூதராகப் பணியாற்றினார்.












Click it and Unblock the Notifications