கோரக்பூர் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு... வாக்குமையத்தில் இருந்து மீடியாக்கள் வெளியேற்றம்!
கோரக்பூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி பாஜகவை முந்தி வரும் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து மீடியாக்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
Recommended Video

லக்னோ: கோரக்பூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி பாஜகவை முந்தி வரும் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து மீடியாக்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. லோக்சபாவிலும், லக்னோ சட்டசபையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்படுவது குறித்து எம்பி,எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் லோக்சபா தொகுதிக்கு மார்ச் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியின் எம்பியாக இருந்த யோகி ஆதித்தயநாத் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு உபி முதல்வராக பொறுப்பேற்றார்.
இதனையடுத்து இந்த தொகுதி எம்பிக்கான பதவி காலியான நிலையில் மார்ச் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 47 சதவீத வாக்குகள் மட்டுமே இங்கு பதிவாகின. கோரக்பூர் லோக்சபா இடைத்தேர்தல் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. இது 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்டது.

பாஜகவின் கோட்டை கோரக்பூர்
அதிலும் குறிப்பாக உ.பியில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியை வீழ்த்தி பாஜக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதால் இந்த தேர்தல் முடிவு பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 2014 லோக்சபா தேர்தலில் உ.பியில் 71 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது, இதன் கூட்டணி கட்சியான அப்னா தல் 2 இடங்களில் வென்றது. எஞ்சிய 7 இடங்களில் 5 இடங்களை முலாயம் சிங் யாதவ் குடும்பத்தினரும், ஏனைய இரண்டு தொகுதிகளில் ராகுல்காந்தியும், சோனியாகாந்தியும் வெற்றி பெற்றனர்.

லோக்சபா தேர்தலில் மும்முனை போட்டி
கோரக்பூர் லோக்சபா இடைத்தேர்தல் களத்தில் 10 வேட்பாளர்கள் உள்ளனர். எனினும் பாஜக, சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. கோரக்பூர் 30 ஆண்டுகளாக பாஜகவின் வசமே உள்ளது, ஆனால் இந்த முறை சமாஜ்வாதிகட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து தேர்தல் களம் கண்டுள்ளன, காங்கிரஸ் தனித்து வேட்பாளரை இறக்கியுள்ளது.

முடிவுகள் அறிவிப்பில் தாமதம்
கோரக்பூர் லோக்சபா இடைத்தேர்தல் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கவுரப் பிரச்னை. ஏனெனில் யோகி ஆதித்யநாத் இந்த தொகுதியில் 5 முறை தொடர்ந்து எம்பியாக இருந்திருக்கிறார். இந்த முறை பாஜக வேட்பாளர் உப்தேந்திர சுக்லாவிற்கு ஆதரவாக யோகி பிரச்சாரம் செய்தார்.
வாக்குப்பதிவு முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 13 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில் 4ம் சுற்று முடிவு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படுவதற்கு பாஜக வேட்பாளரின் பின்னடைவே காரணம் என்று சொல்லப்படுகிறது.

மீடியாக்கள் தடுத்து நிறுத்தம்
பாஜக பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் காலை 11 மணி முதலே வாக்கு எண்ணும் மையத்திற்குள் மீடியாக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே கோரக்பூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து மீடியாக்கள் வெளியேற்றப்பட்டதற்கு பத்திரிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பான சிபிஜே கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகளை தெரிந்து கொண்டு அவற்றை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய முழு உரிமையும் பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கிறது, அவர்களின் பணியை யாரும் தடுக்க முடியாது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

லக்னோ சட்டசபை, லோக்சபையில் அமளி
இதனையடுத்து சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏக்கள் லக்னோ சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லக்னோ சட்டசபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவிலும் பாஜகவின் செயலுக்கு எதிராக சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி எம்பிகள் முழக்கமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.












Click it and Unblock the Notifications