இன்னும் ஓராண்டில் ஆளில்லா லெவல் கிராசிங் இருக்க கூடாது.. அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடி உத்தரவு
டெல்லி: ரயில்வே துறையில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உயர்மட்ட அளவிலான ஆலோசனையை நடத்தினார்.
பாதுகாப்புதான் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் அந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினார். மேலும், ஆளில்லா லெவல் கிராசிங், ரயில் தடம் புரள்வது உள்ளிட்ட 5 பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று அப்போது அமைச்சர் வலியுறுத்தினார்.
3 வருடங்களுக்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்ற பழைய இலக்கை மாற்றியமைத்த பியூஷ் கோயல், இவற்றை இன்னும் ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, ரயில்வே பாதுகாப்பு குறித்த முழு பிரசன்டேசன் காண்பிக்கப்பட்டது.
விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து இந்த கூட்டத்தில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
இரு முக்கிய விஷயங்கள்தான் விபத்துகளுக்கு காரணம் என்பது ஆலோசனை கூட்டத்தில் கண்டறியப்பட்டது.
1) 2016-17ல் ஆளில்லாத லெவல் கிராசிங் மூலமாகத்தான் சுமார் 34 சதவீத விபத்துகள் நடந்துள்ளன.
2) ரயில்வே பாதைகளில் ஏற்படும் பிரச்சினைகள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இவ்விரண்டு பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து அதிக கவனம் செலுத்தி ஆலோசிக்கப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
1) இன்னும் ஓராண்டுக்குள் நாட்டில் ஆளில்லா லெவல் கிராசிங் இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றற முன்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்த 3 வருட கால கெடு ஓராண்டாக குறைக்கப்படுகிறது.
2) தண்டவாள மாற்றம், சீரமைப்பு உள்ளிட்டவை வேகமாக நடைபெற வேண்டும்.
3) புதிய ரயில் பெட்டிகளை அதிக அளவு வாங்குவதில் துரிதம் காட்ட வேண்டும்.
4) வழக்கமான ஐசிஎப் மாதிரி உருவாக்கத்திலான ரயில் பெட்டிகள் தவிர்க்கப்பட்டு, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த LHB வகை ரயில் பெட்டிகளைத்தான் வாங்க வேண்டும்.
5) பனிக்காலத்திலும் வெளிச்சம் தரக்கூடிய எல்இடி லைட்டுகளைத்தான் இன்ஜின் முகப்பில் மாட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.