''சித்தப்பூ.. கொஞ்சம் ஓரங்கட்டி நில்லு.. நான் லாலு பொண்ணு...''
பாட்னா: லாலுவின் மகள் மிசா பார்த்தி தனது 'சித்தப்பாக்களை' எதிர்த்து பாடலிபுத்ரா தொகுதியில் நிற்கிறார்.
ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகளும் பீகாரின் பாடலிபுத்ரா லோக்சபா தொகுதி வேட்பாளருமான மிசா பாரதியை எதிர்த்து அவரால் முன்பு செல்லமாக "சித்தப்பா" என அழைக்கப்பட்ட இருவர் போட்டியிடுகின்றனர்.
"சித்தப்பாக்களை மிசா பாரதி தோற்கடிப்பாரா,இல்லையா" என்று வாக்காள பெருமக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
ராம் கிருபால் யாதவ்:
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சி நடக்கிறது. அம்மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ராம் கிருபால் யாதவ்.
பாடலிபுத்ர வேட்பாளர்:
பாடலிபுத்ரா தொகுதியை தனக்கு ஒதுக்கும் படி லாலுவிடம் கேட்டார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளதால் தேர்தலில் போட்டியிட முடியாத லாலு தன் மகள் மிசா பாரதியை பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிடச் செய்தார்.
முறுக்கி கொண்ட முதல் சித்தப்பா:
இதனால் ஆத்திரம் அடைந்த ராம் கிருபால் யாதவ் பா.ஜ.க கட்சியின் முகாமுக்கு தாவினார். இதற்கு பரிசாக பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பா.ஜ. மேலிடம் அவருக்கு வழங்கியது. ராம் கிருபால் யாதவ் லாலு கட்சியில் இருந்தபோது மிசா பாரதி அவரை சித்தப்பா என அழைப்பது வழக்கம்.
இரண்டாவது சித்தப்பா ரஞ்சன்:
அது போல் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் தற்போதைய எம்.பி.யான ரஞ்சன் யாதவ் மீண்டும் பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் லாலு முதல்வராக இருந்த போது அவர் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பை வகித்தவர்.
எதிர்த்து போட்டியிடும் மிசா:
ரஞ்சன் யாதவையும் மிசா பாரதி சித்தப்பா என்று தான் அழைப்பார். பின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ரஞ்சன் யாதவ் தாவினார். ஒரு காலத்தில் தான் சித்தப்பா என அன்புடன் அழைத்தவர்களை பாடலிபுத்ரா தொகுதியில் இப்போது எதிர்ப்பது மிசா பாரதிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா:
இதுகுறித்து மிசா பாரதி கூறுகையில் ''அவர்களை எதிர்த்து போட்டியிடுவது வருத்தம் அளித்தாலும் அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்பதால் என் வெற்றிக்காக முழு வீச்சில் களம் இறங்கியுள்ளேன்'' என்றார். பீகாரின் 40 தொகுதிகளுக்கு ஆறு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. முதற்கட்ட தேர்தல் இம்மாதம் 10 இல் நடக்கிறது.