நேபாளத்தில் மாயமான சிடிஎஸ் என்ஜினியர் நீலிமா கண்டுபிடிப்பு
டெல்லி: நேபாளத்தில் மாயமான ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் நீலிமா புதோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள காக்னிசன்ட் டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினயராக உள்ள நீலிமா புதோட்டா நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது மாயமாகிவிட்டார்.
இமயமலையேறுவதற்காக சென்ற இடத்தில் நீலிமா மாயமானார். இந்நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், பத்திரமாக இருப்பதாகவும் அவருடன் சென்ற ஒருவர் போன் மூலம் தகவல் அளித்துள்ளார். அவர்கள் மலையேறும் திட்டத்தை பாதியில் கைவிட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் சிக்கித் தவித்த ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் ஹைதராபாத் மற்றும் சென்னை சென்றனர். மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கடப்பா, விசாகப்பட்டினம் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள்.
மேலும் 300 தெலுங்கு மக்கள் காத்மாண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.