ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி.. மகளின் கண் முன் இஸ்லாமியரை தாக்கிய கும்பல்.. அதிர்ச்சி.. 3 பேர் கைது!
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர் ஒருவரை கும்பல் ஒன்று மோசமாக தாக்கி, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட சொல்லி வறுபுறுத்திய வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருந்த 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களாக வடஇந்திய மாநிலங்களில் கும்பல் வன்முறைகள் எனப்படும் mob lynching, mob riots அதிகமாக நடந்து வருகிறது. குழுவாக சேர்ந்து ஒரு நபரை போட்டு அடிப்பது, முக்கியமான மத ரீதியான தாக்குதல்களை குழுவாக நடத்துவது அதிகரித்து வருகிறது. அதிலும் உத்தர பிரதேசத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.
முக்கியமாக இஸ்லாமியர்கள் பலர் கடந்த சில வருடங்களாக உத்தர பிரதேசத்தில் கும்பல்கள் வன்முறைகளால் பாதிக்கப்படுகிறார்கள். பலரை ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி சில கும்பல் தாக்கும் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் கான்பூரில் இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன நடந்தது?
கான்பூரில் தாக்கப்பட்ட அந்த நபரின் பெயர் அப்சார் அஹமது. இவர் அங்கு இ ரிக்சா ஓட்டி வருகிறார். நேற்று முதல்நாள் மதியம் இவர் ரிக்சா ஒட்டிவிட்டு சாலை ஓரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்த போது, அந்த இடத்திற்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று அப்சாரை மோசமாக தாக்கி உள்ளனர். பெரிய கும்பல் ஒன்று அவரை சுற்றி நின்றி கன்னத்தில் அறைந்து, குச்சிகள் மூலம் தாக்கி கொடுமை படுத்தி உள்ளனர். சுற்றி நின்று மாறி மாறி மோசமாக தாக்கி உள்ளனர்.

தாக்குதல் மகள் கெஞ்சல்
அதிலும் கொடுமையான விஷயம் என்னவென்றால், அப்சாருடன் அப்போது அவரின் குழந்தையும் இருந்துள்ளார். பெண் சிறுமி அப்பாவை கட்டிப்பிடித்துக்கொண்டு.. அவரை விடுங்கள்.. அடிக்காதீர்கள் என்று தொடர்ந்து கெஞ்சி இருக்கிறார். கண்ணீர் பொங்க அந்த சிறுமி கெஞ்சியும் கேட்காமல் மாறி மாறி அந்த கும்பல் அப்சாரை தாக்கி உள்ளனர். காவி துண்டு , தலையில் காவி band அணிந்து இருந்த இந்த கும்பல் அப்சாரை ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி மோசமாக தாக்கி இருக்கிறார்கள். அதோடு அந்த தெரு முழுக்க அவரை அடித்தபடி ஜெய் ஸ்ரீராம் என்று முழுங்கிக்கொண்டே பரேட் நடத்தி உள்ளனர்.

போலீஸ் மீட்டனர்
அந்த இடத்திற்கு போலீஸ் வரும் வரை அங்கிருந்த பொது மக்கள் யாரும் இந்த கொடுமையை தட்டி கேட்கவில்லை. இந்த நிலையில் கடைசியாக போலீஸ் வந்து அப்சாரை மீட்டனர். அதுவரை அந்த கும்பல் மாறி மாறி அப்சாரை தாக்கிக்கொண்டேதான் இருந்தனர். மோசமாக அடி வாங்கி காயங்களோடு இருந்த அப்சாரை போலீசார் காப்பாற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். மொத்தம் 10 பேர் இந்த குழு வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வழக்கு
எல்லோரின் மீதும் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. அஜய், ராகுல் குமார், அமர் குப்தா ஆகிய மூன்று பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். போலீஸ் நிலையில் அப்சார் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அஜய், அவரின் மகன் டான், கேஸு நீட்டா, ரமேஷ், ராணி ஆகிய 10 பேர் மீது அப்சார் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி இணையத்தை உலுக்கி உள்ளது. இவ்வளவு கொடூரமான தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு நாம் மிக மோசமான நிலைக்கு சென்று விட்டோமா என்று பலரும் கேள்வி எழுப்பி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏன் இப்படி
தாக்கப்பட்ட இஸ்லாமியருக்கும் அந்த கும்பலுக்கும் ஏற்கனவே இருந்த சில மோதல்கள் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் எல்லோரும் ராம்கோபல் சவ்ராஹா என்ற பகுதியை சேர்ந்தவர்கள். அருகருகே வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இடையில் ஏற்கனவே எதிர்வீட்டு தகராறு உள்ளிட்ட மோதல்கள் இருந்துள்ளன. இதில் அப்சார் குடும்பத்தினரை ஏற்கனவே அந்த கும்பல் தாக்க முயன்றுள்ளது.

மாறி மாறி புகார்
இதையடுத்து அப்சார் குடும்பத்தினர் போலீசாரிடம் கிரிமினல் கேஸ் கொடுத்துள்ளார். இதற்கு பதிலாக அந்த கும்பலை சேர்ந்த அஜய் மற்றும் ராணி ஆகியோர் போலீசில் அப்சார் குடும்பத்திற்கு எதிராக மத மாற்ற புகாரும், பெண்களை மானபங்கப்படுத்தியதாகவும் புகார் அளித்துள்ளனர். இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வந்து இருக்கிறது. இதன் பின்பே குழுவாக சென்று அந்த இஸ்லாமியரை தாக்கி உள்ளனர். அருகருகே பல வருடங்களாக வசித்து வந்தாலும் இவ்வளவு மோசமாக தாக்கும் அளவிற்கு இவர்களுக்கு இடையில் வன்மம் இருந்துள்ளது.

போராட்டம்
இந்த சம்பவத்தை தொடர்ந்து அஜய், ராகுல் குமார், அமர் குப்தா ஆகிய மூன்று பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு எதிராக பஜ்ரங் தல் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் பெரிய அளவில் போராட்டம் நடத்தி உள்ளனர். அந்த இஸ்லாமியரை தாக்கிய கும்பல் மீது தவறு இல்லை. அவர்களை விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் பெரிய அளவில் போராட்டம் நடக்கும். உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி போராடி வருகிறார்கள். கான்பூரில் மட்டுமின்றி தேசிய அளவில் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications