பயங்கரவாதி, ஊழல்வாதி என சொன்னாங்க..ஏன் நடவடிக்கை எடுக்கல..எல்லாம் இதற்காகத்தான்..கெஜ்ரிவால் அட்டாக்
அகமதாபாத்: பயங்கரவாதி, ஊழல்வாதி என என்னை மோடியும் அமித்ஷாவும் கூறினார்கள்.. அப்படி இருந்தால் ஏன் என்னை கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
குஜராத்தில் கால் நூற்றாண்டு காலமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. பாஜகவின் கோட்டையாக திகழும் குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
பாஜகவுக்கு சவால் அளிக்குமா
அதுவும் ஆம் அத்மி இந்த முறை பாஜகவுக்கு கடும் சவால் அளிக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, அதே உத்வேகத்துடன் குஜராத் பக்கம் திரும்பியிருக்கிறது. தேர்தல் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்ட ஆம் ஆத்மி தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
ஊழல் மிகுந்த கட்சி ஆம் ஆத்மி
பாஜகவுக்கு கடும் தலைவலியை கெஜ்ரிவால் ஏற்படுத்தி வரும் நிலையில், கெஜ்ரிவால் மீதும் பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதேபோல், டெல்லி மாநகராட்சி தேர்தலும் நடைபெற இருப்பதால் ஆம் ஆத்மி- பாஜக இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது. நாட்டிலேயே மிகவும் ஊழல் மிகுந்த கட்சி ஆம் ஆத்மிதான் என்று பாஜக தலைவர்கள் விமர்சித்து இருந்தனர். பாஜகவின் இந்த விமர்சனங்களுக்கு கெஜ்ரிவாலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.
கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி
அந்த வகையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் தனது ட்வீட் பதிவில் பாஜகவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். இந்தியில் ட்வீட் செய்த கெஜ்ரிவால் அதில் கூறியிருப்பதாவது:- மக்களின் விருப்பத்திற்கு உரிய தலைவராக நான் இருக்கிறேன். மக்கள் என் மீது செலுத்தும் அன்பு பாஜகவுக்கு பிர்ச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி என்று பிரதமர் மோடி கூறினார்.
பாஜகவுக்கு இதுதான் பிரச்சினை
விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதெல்லாம் என்ன ஆனது? தற்போது குஜராத் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவால் ஊழல்வாதி என்று விமர்சிக்கின்றனர். கெஜ்ரிவால் பயங்கரவாதியோ அல்லது ஊழல்வாதியாகவோ இருந்தால் கைது செய்திருக்க வேண்டும் இல்லையா? கெஜ்ரிவால் பயங்கரவாதியோ ஊழல்வாதியோ கிடையாது. கெஜ்ரிவால் மக்கள் விரும்பும் நபர். பாஜகவுக்கு இதுதான் பிரச்சினையாக இருக்கிறது" என்றார்.
ஒருவருக்கொருவர் விமர்சிப்பு
250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்ததேர்தலில் பதிவான வாக்குகள் 7 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஆம் ஆத்மி, பாஜக கட்சி நிர்வாகிகள் மாறி மாறி ஒருவொருக்கொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.