மக்களின் தொடர்பு எல்லைக்கு வெளியே மோடி அரசு.. கேஜ்ரிவால் குற்றச்சாட்டு
ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் மக்களுடனான தொடர்பை மத்திய அரவு இழந்துவிட்டது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ரூபாய் நோட்டுக்கள் செல்லாத அறிவிப்பை திரும்பப் பெற இயலாது என மத்திய அரசு கூறியிருப்பது அது மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டதையே காட்டுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை திரும்பப் பெறுவது குறித்து உரிய பரிசீலனையும், ஆய்வும் செய்யாமலே வெறுமனே மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மறுத்திருப்பது தமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தி இருப்பதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டது என்றும் அவர் குற்றம் சுமத்தினார். இத்தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை மூன்று நாட்களுக்குள் திரும்பப் பெறாவிட்டால் வீதியில் இறங்கி போராடுவோம் என்று டெல்லி, மேற்கு வங்க முதலமைச்சர்களான கெஜ்ரிவாலும், மம்தா பானர்ஜியும் வியாழக்கிழமை அறிவித்தனர்.
இதற்கு உடனடியாக பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலும், மம்தாவும் மக்களிடையே பீதியை கிளப்புவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தது. அன்றைய தினம் முதல் நாடுமுழுவதும் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.