ஆந்திர தலைநகர் ‘அமராவதிக்கு’ அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
அமராவதி: பிரதமர் மோடி ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதிக்கு, இன்று அடிக்கல் நாட்டினார். அதனையொட்டி அமராவதி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர்மாவட்டத்தில், கிருஷ்ணா நதியின் தெற்கு கரையோரம் புதிய தலைநகருக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கு 'அமராவதி' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த பகுதி முன் நாளில் சாதவாகனர்களால் ஆளப்பட்டது
பிரதமர் மோடி
இதற்கான அடிக்கல் நாட்டு விழா விஜயவாடாவில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள உத்தந்தரயுனிபாலம் என்ற கிராமத்தில் இன்று நடைபெற்றது. ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கண்ணவரம் வருகை
இதற்காக அவர் விஜயநகரத்தில் உள்ள கண்ணவரம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பூமி பூஜை
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்திற்குச் செல்கிறார் மோடி. அங்கு பூமி பூஜையில் பங்கேற்கிறார்.
முக்கிய பிரமுகர்கள்
இதனையொட்டி அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா,ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ், மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, நிர்மலா சீதாராமன்,ஜப்பான் நாட்டு அமைச்சர் யோசுகி தகாசி, சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் மற்றும் 16 நாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் மாநில அமைச்சர்கள், தெலுங்கு திரை உலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்களும் லட்சக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.
'ஷிலா நியாஸ்
ஆந்திராவின் 16,௦௦௦ கிராமங்கள் மற்றும் நாட்டின் முக்கிய புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மண், தண்ணீர் அமராவதி நகருக்கான அஸ்திவாரத்தில் இடப்பட்டது.
நான்கு லட்சம் மக்கள்
பிரதமர் மோடி, 'ஷிலா நியாஸ்' என்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கான, சம்பிரதாய சடங்குகளை துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார். நான்கு லட்சம் மக்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
மதிய உணவு
பூமி பூஜையை முடித்துக் கொண்டு மீண்டும் கண்ணவரம் திரும்பும் பிரதமர் அங்கு மதிய உணவை முடித்து விட்டு ரேணிகுண்டா புறப்பட்டுச் செல்கிறார்.
கருடா விமான நிலையம் திறப்பு விழா
ரேணிகுண்டா விமான நிலையம் அருகில் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு உள்ள கருடா விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி.
பத்மாவதி விருந்தினர் மாளிகை
பின்னர் திருப்பதியில் மொபைல் தயாரிப்பு நிறுவன பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 4.20 மணியில் இருந்து 5.10 மணிவரை திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
திருமலை திருப்பதியில் தரிசனம்
அதைத்தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திருமலைக்கு செல்கிறார். மாலை 6.15 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். கோவிலில் இருந்து வெளியே வந்ததும் திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் திருமலையில் இருந்து புறப்பட்டு 6.55 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் செல்கிறார்.
இரவு 7 மணிக்கு டெல்லி
இரவு 7 மணிக்கு ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் நரேந்திரமோடி ஆந்திர மாநிலம் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு உள்ளது.